கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!
கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியில் நேற்று (ஜூன் 19) இரவு மீன்பிடி படகில் சுமார் 352 அகதிகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு சென்ற ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்புப் படையான ஃப்ரொண்டெக்ஸ் அமைப்பினர், அந்தப் படகிலிருந்த பயணிகள் அனைவரையும் தங்களது கப்பல்கள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கிரீட் தீவின் தென் கடல்பகுதியில் மற்றொரு மீன்பிடி படகு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் படகிலிருந்த 278 பேரும் அப்பகுதியில் சென்ற போர்ச்சுகல் நாட்டின் சரக்கு கப்பல் மீட்டு கரைக்கு அழைந்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த 2 மீன்பிடி படகில் பயணித்த அகதிகள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேபோல், அப்பகுதியில் அகதிகளுடன் வந்த மேலும் 2 படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ஒரு படகில் 73 பேரும், மற்றொரு படகில் 1 பெண் 3 குழந்தைகள் உள்பட 26 பேரும் மீட்கப்பட்டதாக கிரீஸ் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
இந்த 2 சிறிய படகுகளும், கடந்த ஜூன் 18 ஆம் தேதி மாலை லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும், கிரீஸ் நாட்டுக்குச் செல்வதற்காக அவர்களது கடத்தல்காரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வரையில் கொடுத்தாகவும் அதில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், சந்தேகத்தின்பேரில் அந்தப் படகுகளை இயக்கி வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பிழைப்புத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் பயணம் செய்கின்றனர்.
இதில், பெரும்பாலான மக்கள் கடத்தல்காரர்களின் உதவியோடு கப்பல்கள் மூலம் பயணம் செய்வதால், வழியில் ஏற்படும் ஆபத்துகளில் அவ்வப்போது சிக்கி பலர் பலியாவது தொடர் கதையாகி வருகின்றது.
இதையும் படிக்க:நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!