'ரஜினி சார், சிவகார்த்திகேயன் அண்ணா எங்க படங்களுக்கும் ஆதரவு கொடுங்க'- திருநங்கை...
ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். இப்பங்களா மிகவும் பழமையானது ஆகும். எனவே எந்த பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும் மாநகராட்சியிடம் ஒப்புதல் பெறவேண்டும். தற்போது ஷாருக் கான் இந்த பங்களாவில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பங்களாவை காலி செய்து விட்டு அருகில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி இருக்கிறார். மன்னத் பங்களாவில் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணியில் கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக மாநகராட்சி மற்றும் வனத்துறையில் சமூக ஆர்வலர் சந்தோஷ் புகார் செய்தார். அப்புகாரை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மன்னத் பங்களாவில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகளும் உடனிருந்தனர். கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் இருந்த ஷாருக் கானின் ஊழியர்களிடம் புனரமைப்பு பணிகளுக்கு பெறப்பட்ட அனுமதிகள் தொடர்பான ஆவணங்களை உடனே தாக்கல் செய்யும்படி வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, ''ஆய்வுக்கு வனத்துறையினர் தங்களுடன் வரும்படி எங்களிடம் கேட்டுக்கொண்டனர். அதனால் வந்திருக்கிறோம். இதில் எங்களுக்கு வேறு எந்த பங்கும் கிடையாது'' என்று தெரிவித்தனர். இது குறித்து ஷாருக் கானின் மேலாளர் பூஜாவிடம் நிருபர்கள் பேசியபோது, ''எந்த புகாரும் எழவில்லை. அனைத்தும் வழிகாட்டுதலின்படிதான் நடைபெறுகிறது'' என்று தெரிவித்தார். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'' எங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் மன்னத் பங்களாவை ஆய்வு செய்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்படும்'' என்று தெரிவித்தனர்.
ஷாருக் கானின் பங்களாவில் நடந்திருக்கும் விதிமுறை மீறல் குறித்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி சிங் கூறுகையில்,'' வில்லா வியன்னா என்ற பெயரை மாற்றி விதிகளை மீறி மன்னத் என்று வைத்துள்ளனர். 2005ம் ஆண்டு மன்னத் பங்களாவிற்கு பின்புறம் இருந்த நிலத்தில் நீட்டித்து புதிய கட்டடம் கட்டிக்கொண்டனர். அந்நேரம் நில உச்ச வரம்பு சட்டம் அமலில் இருந்ததால் பெரிய அபார்ட்மெண்ட் கட்ட முடியாது. எனவே சட்ட சிக்கலில் இருந்து விடுபட ஷாருக் கானும், அவரது மனைவி கெளரி கானும் மன்னத் பங்களாவில் 12 தனி பிளாட்கள் இருப்பதாக கூறி மாநகராட்சியில் அனுமதி பெற்றுக்கொண்டனர். 12 பிளாட்களுக்கு மாநகராட்சி ஒப்புதல் கொடுத்தவுடன் ஷாருக் கான் 12 பிளாட்களையும் ஒன்றாக இணைத்து ஒரே குடும்பம் வசிக்கக்கூடிய வகையில் ஆடம்பர பங்களாவாக மாற்றி விட்டார். மாநகராட்சி அதிகாரிகளின் துணை இல்லாமல் இதை செய்திருக்க முடியாது.
இப்போது நில உச்ச வரம்பு அமலில் இல்லாவிட்டாலும் விதிகளை மீறி 12 பிளாட்களை ஒன்றாக இணைத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். இதனால் ஷாருக் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஷாருக் கான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் 24 லட்சம் வாடகை கொடுத்து வருகிறார். மன்னத் பங்களாவின் புனரமைப்பு பணிகள் முடிய 3 ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும் என்பதால் ஷாருக் கான் வாடகை விட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து எடுத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு ஷாருக் கான் மொத்தம் 8.7 கோடி வாடகையாக கொடுக்க இருக்கிறார். ஷாருக் கான் தற்போது வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டின் அளவு 10,500 சதுர அடியாகும். அதாவது மன்னத் பங்களாவில் பாதியாகும்.