ஏற்றுமதியில் ரூ.100 கோடி ஜிஎஸ்டி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை!
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூவரும் சதம் விளாசி அசத்தினர். கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தோனியின் சாதனை முறியடிப்பு
முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 178 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 6 சதங்கள் விளாசியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 7-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தோனியின் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இரண்டு சதங்களுடன் விருத்திமான் சஹா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், 3082 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4876 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும்.
இதையும் படிக்க: பந்துவீச்சை தேர்வு செய்த பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியா? டிம் சௌதி பதில்!