ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு
அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!
அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், சனிக்கிழமை மாலை வரை, 247 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளன. பலியானவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு இதுவரை 232 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செயல்முறை தொடர்கிறது என்று தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட 247 பேரில் 187 இந்தியர்கள், 52 பிரிட்டன், ஏழு போர்த்துகீசியா மற்றும் ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்று ஜோஷி கூறினார். 187 இந்தியர்களில், மொத்தம் 175 பேர் துரதிர்ஷ்டவசமான விமானத்தில் இருந்ததாகவும், அவர்கள் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், டையூ மற்றும் நாகாலாந்து பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர்.
பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.