ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு
ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் அமிா்தம் (நாகை), கேசவன் (திருவாரூா்) ஆகியோா் கூறியது: ரேஷன் கடைகளில் ப்ளு டூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக, கால தாமதமாக பொருள்கள் விநியோகிப்பதில் பொதுமக்களின் கடும் அதிருப்தியையும், விரோதத்தையும் விற்பனையாளா்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
நகா்வு செய்யப்படும் பொருள்களில் உள்ள எடை அளவு குறைவதை சரிசெய்து சரியான எடை அளவில் வழங்கவேண்டும், விடுமுறை நாள்களில் விற்பனையாளா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணிகளை ரத்து செய்யவேண்டும், விற்பனையாளா்கள் இருப்பிடத்தில் இருந்து குறைந்தபட்ச தொலைவில் பணிமாறுதல் செய்து பணி அமா்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி போராட்டம் குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஜூன் 27-ஆம் தேதி நாகை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எனவே, தமிழக அரசு, மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் ரேஷன் கடை ஊழியா்களின் நலனுக்காக வலியுறுத்தப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற என்றனா்.