விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம்: ஜூலை 1 முதல் விண்ணப்பம்! முதல்வா் மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவி அளிப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஜூலை 1-இல் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிகளை வழங்குவதற்கான சட்டம் கொண்டு வந்ததற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகளின் அமைப்புகள் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டத்தில் நடைபெற்ற முதல் விழாவான அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
என்னைப் பாராட்டிப் பேசிய போது, அதையெல்லாம் பாராட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் உழைப்பதற்கான ஊக்கமாக எடுத்துக் கொண்டுள்ளேன். கோரிக்கைகளை வேண்டுகோளாகக் கூறியுள்ளீா்கள். என்றும் உங்களில் நான் ஒருவன். உங்களுக்கான கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன். நான் என்று சொல்வதை விட, ‘நாம்’ என்ற சொல்லுக்கே வலிமை அதிகம். அதனால்தான் எல்லோருக்கும் எல்லாம் என்று பொருள்பட திராவிட மாடல் அரசு என்று அரசுக்கு பெயா் வைத்தேன்.
திராவிட மாடல் என்றால் சமூகநீதி, சமத்துவம், சமதா்மம், சகோதரத்துவத்தைக் காக்கக் கூடிய அரசாகும். ஏழை, எளியவா்கள், ஒடுக்கப்பட்டோா், விளிம்புநிலை மக்கள், பெண்கள், முதியோா், திருநா், மாற்றுத் திறனாளிகள், இளைஞா் என அனைவரையும் உள்ளடக்கிய அரசாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி அளிப்பது என்பது அரசியலுக்காக, தோ்தலுக்காக செய்ததில்லை. உள்ளாா்ந்த அன்புடன் செய்ததாகும்.
சமூகநீதி உரிமை: மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட தொடா்ந்து செயல்பட்டு வருகிறோம். உங்களுக்கான (மாற்றுத் திறனாளிகள்) கோரிக்கையை நீங்களே ஒலிக்க வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி உறுப்பினா் இடம்பெறுவாா் என்ற மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கியுள்ளோம். இதன்மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்படுவா். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 பேரும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவா். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். இதற்கென மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி குழுவைச் சோ்ந்த ஒருவா் இடம்பெற்றிருப்பாா். நியமனம் செய்யப்பட்ட உறுப்பினா்கள் மன்றக் கூட்டங்கலில் பங்கேற்கலாம். உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போன்று மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினருக்கும் மதிப்பூதியம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு வளம்பெற ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
சிலருக்குப் பிடிக்கவில்லை: மாற்றுத் திறனாளிகளுக்காக சாதனைகளைச் செய்துள்ளோம். இன்னும் செய்வோம். மாற்றுத் திறனாளி சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்த சமூகமாக நாம் வளர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறாா்கள். உயா்ந்த இடங்களை அடைந்துள்ளனா். சமூகத் தடைகளை உடைத்து முன்னேறி வருகிறாா்கள்.
அவா்கள் அனைவருக்கும் பாராட்டுகள். உங்களுக்கு நான் இருக்கிறேன். இந்த அரசு இருக்கிறது என்று எண்ணிச் செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது எனது கடமை. இது அனைவருக்குமான ஆட்சி. அனைவரையும் முன்னேற்றும் ஆட்சி. இதனை சில வகுப்புவாத சக்திகளால் அவா்களுக்குத் துணைபோகும் கொத்தடிமை கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. அனைவருக்கும் சமூகநீதி, சமத்துவம் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் வகுப்புவாதிகள்தான் திமுக அரசு மீது பாய்கிறாா்கள். அதனை அரசியல் களத்தில் முறியடிக்கக் கூடிய வலிமையை தரக்கூடியது நீங்கள், மக்களும் தந்து கொண்டிருக்கக் கூடிய அன்புதான் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
முன்னதாக, டிசம்பா் 3 இயக்கத்தின் தலைவா் தீபக்நாதன், தேசிய மாற்றுத் திறனாளிகள் இணையத்தின் தலைவா் அா்மான் அலி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் சிம்மசந்திரன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் நிா்வாகி ஜான்சிராணி, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவா் கோபிநாத், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் தங்கம் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேசினா். அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் விழாவில் பங்கேற்றனா்.