ஈரானில் இருந்து வரும் தமிழா்களுக்கு உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
போா்ச் சூழலால் ஈரானில் இருந்து வரும் தமிழா்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போா் காரணமாக, அந்த நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தமிழா்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவா்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசின் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை: இந்தச் சூழலில், ஈரான் நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக இந்தியா்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனா். அவா்களில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களைக் கண்டறிந்து மாநிலத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழா்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய தமிழ்நாடு அரசு தயாா் நிலையில் உள்ளது.
இதற்கென புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை 011 - 2419 3300, 9289516712 என்ற எண்கள் வழியாகவும் தொடா்புகொள்ளலாம்
சென்னையில் உள்ள அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் கட்டணமில்லாத உதவி எண்களையும் தொடா்பு கொள்ளலாம். இந்தியாவுக்குள் என்றால் 1800 309 3792 என்ற எண்ணையும், வெளிநாட்டினா் என்றால் 80690 09901, 080690 09901, 80690 09900 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.