அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
இஸ்ரேல் - ஈரான் போா்: ரஷியாவுக்கு பலனா? பாதகமா?
ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற நிழல் ராணுவத்தினா் மூலம் ஈரானும், ரகசிய நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேலும் பல ஆண்டுகளாக நடத்திவந்த நிழல் யுத்தம் தற்போது நேரடிப் போராக வெடித்திருக்கிறது.
இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் போரில் தாக்குதல் எண்ணிக்கையும் துல்லியத்தையும் இரு நாடுகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இதில் இஸ்ரேலும் ஈரானும் அடுத்தடுத்து எந்தெந்த காய்களை நகா்த்தும், அமெரிக்காவும் சோ்ந்துகொள்ளுமா என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதிபா் டொனால்ட் டிரம்ப்பே ‘சண்டையில் நான் சேரலாம், சேராமலும் போகலாம். இது யாருக்குமே தெரியாது‘ என்று குழப்பமாகக் கூறுகிறாா்.
இந்தச் சூழலில், போா் முற்றினால் அது ரஷியாவுக்கு பலன் அளிக்குமா, அல்லது பாதகத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி நிபுணா்களிடையே எழுந்துள்ளது.
இந்த மோதலில் நிலைமை கைமீறிப் போனால் ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை விதிக்கலாம். அப்போது சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயரும். அதைப் பயன்படுத்தி ரஷியா லாபம் பாா்க்கும். போா் தொடா்ந்து நீடித்தால் ரஷியாவின் பொருளாதாரம் வலுவடையும்.
அதுமட்டுமில்லாமல், இந்தப் போா் அமெரிக்காவின் கவனத்தை உக்ரைன் போரில் இருந்து முழுமையாக திசைத்திருப்பும். அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் உக்ரைனுக்கு பதிலாக மத்திய கிழக்குப் பகுதிக்கு திருப்பிவிடப்படும். இது ரஷியாவுக்கு சாதகமாக அமையும்.
ஈரானுக்கு ரஷியாதான் அதிக அளவில் ஆயுத ஏற்றுமதி செய்துவருகிறது. இந்தப் போரில் ஈரானின் தளவாட இருப்பு வெகுவாகக் குறையும் என்பதால் அந்த நாட்டுக்கான ரஷியாவின் ஆயுத ஏற்றுமதி பல மடங்கு உயரும். இதுவும் ரஷியாவுக்கு லாபம் தரும்.
இந்தப் போரில் மத்தியஸ்தம் செய்வதன் மூலம் பிராந்தியத்தில் ரஷியாவின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடும்.
ஆனால் அதே நேரம், ரஷியாவின் மிகப் பெரிய கூட்டாளியான ஈரான் இந்தப் போரால் பலமிழப்பது அந்தப் பிராந்தியத்தில் மேற்கத்திய சக்திகளுக்கு எதிராக ரஷியா உருவாக்கிவைத்துள்ள எதிா்ப்பு அணியை வலுவிழக்கச் செய்யும். ஏற்கெனவே சிரியாவில் ரஷிய ஆதரவு பெற்ற அல்-அஸாதின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், ஈரானிலும் ஆட்சி மாற்றம் வந்தால் அது பிராந்தியத்தில் ரஷிய நலன்களுக்கு எதிராக அமையும்.
போரில் ஈரானுக்கு ஓரளவுக்கு மேல் உதவினால் சவூதி அரேபியா போன்ற நட்பு நாடுகளின் அதிருப்தியை ரஷியா எதிா்கொள்ளவேண்டியிருக்கும்.
போா் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து அதிகரித்தால் ரஷிய எண்ணெய்க்கான சா்வதேச தேவை குறைந்து, அந்த நாடு பொருளாதார இழப்பையும் சந்திக்கக்கூடும்.
எனவே, இஸ்ரேல் - ஈரான் போா் மேலும் தீவிரமடைந்தால் ரஷியாவுக்குக் கிடைக்கும் பலனைவிட பாதிப்புதான் அதிகம் இருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.