செய்திகள் :

சொல்லப் போனால்... வெட்கப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

post image

ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அதிரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தில்லியில் சில நாள்கள் முன் நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய அமித் ஷா, “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் விரைவில் வெட்கப்படுவார்கள்; அத்தகைய சமுதாயம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

“நமது நாட்டின் மொழிகள் யாவும் நமது பண்பாட்டின் ஆபரணங்கள். நம்முடைய மொழிகளின்றி நாம் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது. நம் பண்பாட்டை, வரலாற்றை அல்லது மதத்தின் சாரத்தை எந்தவோர் அன்னிய மொழியும் நிறைவான விதத்தில் வெளிப்படுத்தாது.

“காலனிய ஆட்சியின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும்; ஆங்கிலத்தைவிட உயர்ந்த நிலையில் இந்திய மொழிகள் இருக்கக் கூடிய சமுதாயம் உருவாக வேண்டும். அன்னிய மொழிகளுக்கு முன்னுரிமை தருவோருக்கு இந்திய சமுதாயத்தில் இடமில்லை என்று அவர்கள் உணரும் காலம் வரும்” என்று  தெரிவித்துள்ளார்.

[அமித் ஷாவின் இந்தப் பேச்சின் விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஏஎன்ஐ செய்தி நிறுவனம், பின்னர் காரணம் எதுவும் குறிப்பிடாமல் அகற்றிவிட்டது].

தேசிய கல்விக் கொள்கையின்வழி மும்மொழித் திட்டத்தின் மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலுவதாக மத்தியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற ஹிந்தி பேசாத மாநிலங்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ஆங்கிலத்தைத் தாக்கியிருக்கிறார் அமித் ஷா.

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் பெரும்பாலும் காலங்காலமாக ஆங்கிலத்தைக் கற்பதன் காரணமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பெருமளவில்  வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்; முன்னிலையில் இருக்கின்றனர்.

மூன்றாவது மொழியை – ஹிந்தியை - அறிமுகப்படுத்த மறுப்பதன் காரணமாகக் கல்விக்கு உரிய வழக்கமான நிதியைப் பெறுவதற்கே மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.

உலகில் பரவலாகப் பேசப்படுகிற ஒரு மொழி. ஒற்றை செல்போனுக்குள் உலகமே சுருங்கிப் போய்விட்ட இந்தக் காலத்தில் இணையத்தில் கோலோச்சும் மொழி. ஆங்கிலம் கற்காத, கற்றுக்கொள்ள இயலாத, வாய்ப்புக் கிடைக்காதவர்கள், அல்லது வாய்ப்புக் கிடைத்தும் கற்றுக்கொள்ளாதவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை நாம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பின் எதற்காக ஆங்கிலத்தில் பேச வெட்கப்படும் காலம் வரும் என்கிறார் அமித் ஷா?

அமித் ஷா ஏதோ ஒரு கூட்டத்தில் அவருடைய கருத்தைப் பேசியிருக்கிறார். இதில் பெரிதுபடுத்த என்ன இருக்கிறது என்றுகூட தோன்றலாம். ஆனால், அவர் யாரோ ஒருவர் அல்லர்; இந்திய அரசில், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். பிரதமர் மோடியின் நிழலெனக் கருதப்படுபவர்.

இந்தியாவில் ஆயிரத்தில் மொழிகள் பேசப்படுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மட்டுமே 22 அலுவல் மொழிகள் இருக்கின்றன. இத்தனை மொழிகள் இருந்தும், இத்தனை இனங்கள் இருந்தும், இத்தனை வேற்றுமைகள் இருந்தும் விடுதலை பெற்று முக்கால் நூற்றாண்டாக ஒன்றுபட்ட நாடாக இந்தியா திகழ்வது பெரும் கொடுப்பினை.

அடிமைப்படுத்தி ஆளவந்த ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடந்த சில நூற்றாண்டுகளில் நாடு முழுவதுமே ஒவ்வொருவரின் தாய் மொழிக்கும் இணை மொழியென, உயர் கல்விக்கான வழியெனத் தவிர்க்க இயலாத வகையில், உருப்பெற்றுவிட்டிருக்கிறது ஆங்கிலம்.

இன்றைக்கு இந்தியாவின் இணைப்பு மொழியாக – யார் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும் – ஆங்கிலம்தான் இருக்கிறது, அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தாலும்.  மத்திய – மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் தொடர்பு மொழியாகவும் இருக்கிறது. நாட்டின் பெரும்பகுதியான உயர் கல்வியும், வணிகம், தகவல் தொடர்பு அத்தனையும் ஆங்கிலத்தைச் சுற்றியே பின்னிப் பிணைந்து இருக்கின்றன.

தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற தென்னிந்திய மாநிலங்களும் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் ஆங்கிலம் அல்லாமல் வேறெந்த மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?

உலகில் தகவல் தொழில்நுட்பத் துறையில், பல உயர் நிலைகளிலும்கூட, இந்தியாவும் இந்தியர்களும் செல்வாக்குள்ளவர்களாகத் திகழ மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆங்கில மொழியறிவுதான்.

ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இருந்திருந்தாலும் அவர்களின் மொழியைக் கற்று, உலக வேலைவாய்ப்புச் சந்தையில் இன்று ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுடனேயே வலுவாகப் போட்டி போடும் அளவில் இருக்கிறார்கள் இந்தியர்கள்.

பன்னாட்டு மூலதனங்கள் குவிகின்றன, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வருகின்றன. ஆங்கிலத்தில் கற்கவும் பேசவும் வெட்கப்படத் தொடங்கினால், இன்று உலகளவில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இளைய தலைமுறை என்ன செய்யும்? எங்கேயும் செல்ல இயலாமல் முடங்கும்  நிலைதான் ஏற்படும்.

இந்தியாவில் ஆங்கிலம் கற்பது, ஆங்கில வழி கற்பது என்பது பல வழிகளிலும், உயர் கல்வி என்றாலும் உள் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்றாலும் - முன்னேற்றத்துக்கான பாதையைத் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை  அவமானம் என்பதாக அடையாளப்படுத்துவதன் மூலம் பல லட்சம் மாணவர்களும் இளைஞர்களும் பாழ்பட்டுத்தான் போவார்கள்.

இந்த மனநிலையும் அணுகுமுறையும் பல வகையிலும் கல்விக் கொள்கையிலும்  கல்விக் கூடங்களிலும் எதிரொலிக்க, ‘ஆங்கிலம் அறியாத அறிவாளி சமுதாயத்தை’ உருவாக்கும் முயற்சியால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய பின்னடைவைத் தவிர்க்க இயலாது என்றே கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.

நாட்டில் உயர் கல்வி அனைத்தும் (அல்லது பெரும்பாலும்) ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. ஆங்கிலம் அறிவது அவசியம். வெட்கப்பட்டால் வேறு என்ன செய்வது? வேறு எந்த மொழிவழி கற்பது? தாய் மொழியில்தான் உயர் கல்வி என்றால் எப்போது? எவரெவருடைய தாய்மொழிகளில் எல்லாம் படிக்க முடியும்? மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஹிந்தியில் சொல்லித் தரப் போகிறார்களா? அல்லது சமஸ்கிருதத்திலா?

வெற்றிகரமான எத்தனையோ நாடுகள் தாய் மொழிகளில் கற்பிக்கவில்லையா? முன்னேறவில்லையா? என்றொரு வாதம் எப்போதுமே முன்வைக்கப்படும்; முன்வைக்கப்படுகிறது. ஆம், எந்தெந்த நாடுகள் இவை? ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, நார்வே, ஸ்வீடன், போர்த்துகல், டென்மார்க், பெல்ஜியம், ஸ்பெயின், கொரியாக்கள் என.

இவற்றுக்கும் இந்தியாவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றிருக்கிறது. இந்த நாடுகள் யாவுமே ஒற்றை மொழி பேசுகிற மக்களைக் கொண்டவை;  அல்லாதபட்சத்தில் ஆகக் குறைந்த அளவுக்கு மொழிச் சிறுபான்மையினரைக் கொண்டவை, அவர்களும்கூட அந்த ஒற்றை மொழிக்குள்ளே வந்துவிட்டிருப்பவர்கள். (சீனாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் மாண்டரின் மட்டுமே ஒரே மொழி).

இந்தியாவின் நிலை அப்படிப்பட்டதல்ல. பல மொழிகள் பேசுகிற, பல இனங்களை, பல மொழிவழிப் பண்பாடுகளைக் கொண்ட, பல மாநிலங்களையும்  அடையாளங்களையும் கொண்ட நாடு. இந்தியாவின் மாநிலங்கள் பலவும் ஒவ்வொரு நாடுகளுக்கு இணையான அல்லது மேலான பரப்பையும் தனியொரு மொழி பேசுகிற மக்களையும் கொண்டவை.

முக்கியமான இந்த விஷயத்தில் ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட பல தலைவர்களும் இன்னமும் கருத்துத் தெரிவிக்காத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டும் உடனடியாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

மக்களிடையே அவர் பேசியது மட்டுமின்றி, எக்ஸ் பக்கத்திலும் “ஆங்கிலம் ஓர் அணை (தடுப்பு) அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானம் அல்ல, அது ஆற்றல். ஆங்கிலம் ஒரு விலங்கு அல்ல - அது விலங்குகளை நொறுக்கும் ஒரு கருவி.

“இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை - ஏனென்றால் நீங்கள் கேள்விகள் கேட்பதையோ, முன்னேறுவதையோ, சமமாக மாறுவதையோ அவர்கள் விரும்பவில்லை.

“இன்றைய உலகில், உங்கள் தாய்மொழியைப் போலவே ஆங்கிலமும் முக்கியமானது - ஏனெனில் அது வேலைவாய்ப்பை அளிப்பதுடன் உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

“இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, பண்பாடு, அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்ற வேண்டும் - அதேவேளையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலத்தையும் கற்பிக்க வேண்டும்.

“ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்குகிற உலகத்துடன் போட்டி போடுகிற இந்தியாவுக்கு இதுதான் பாதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

75 ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென காலனிய அடையாளமாகக் கருதி, ஆங்கிலத்தில் பேசுவதற்காகவும் எழுதுவதற்காகவும் வெட்கப்பட வேண்டிய நிலையேற்பட்டால், இந்தியர்கள் எல்லாரும் வேறெந்த மொழியைப் பேசுவதற்காகப் பெருமிதம் கொள்ள வேண்டியிருக்கும்?

ஆங்கிலத்தை எதிரியெனச் சித்திரிக்க முனைவதன் மூலம் எந்த மொழியைத் தேச பக்தியின் அடையாளமாக மாற்ற விழைகிறார்கள்?

அந்த இடம் எந்த மொழிக்கு வழங்கப்படும்? மக்களின் தாய் மொழிகளுக்கா? தமிழுக்கா, மலையாளத்துக்கா, கன்னடத்துக்கா, தெலுங்கிற்கா, பஞ்சாபிக்கா, மராட்டிக்கா, பிகாரிக்கா, ஒடியாவுக்கா, போஜ்புரி போன்றவற்றுக்கா, அல்லது ஹிந்திக்கா? சொல்லாமல் எதைச் சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.

ஏற்கெனவே, ஹிந்தியின் செல்வாக்கால் மகாராஷ்டிரம் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மக்களின் எண்ணற்ற தாய் மொழிகள் – மைதிலி போன்றவை -  கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்துகொண்டிருக்கின்றன.

உலகளவில் இந்தியர்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்துக்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது நம் ஆங்கிலப் புலமை.

உலகம் முழுவதும் அல்லது உலகில் பெரும்பாலான நாடுகளுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள முடியும்.  ஆங்கிலத்தை அவமானமாகக் கருதும் அணுகுமுறையால் எதிர்காலத்தில் இந்தியாவுக்கே பேரிழப்புதான் நேரிடும்.

அமித் ஷாவின் அநியாயமான கோபத்துக்குப் பின்னால் ஒரு நியாயமும் இருக்கிறது. இங்கே பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது – வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல, “ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எல்லாம் அறிவாளி; மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது.” தகர்க்கப்பட வேண்டியது இந்தக் கருத்துதானே தவிர ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் ஒரு மொழி, உலகளாவிய வாசலுக்கான திறமான ஒரு திறப்பு, அவ்வளவுதான். அறிவுக்கும் ஆங்கிலத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை.

பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, உயர் கல்வியிலோ தாய் மொழிவழிக் கல்வியே சிறந்தது; உத்தமம். ஆனால், அதுவே இந்தியா போன்ற நாட்டில் கிடைக்காவிட்டால், அடுத்த இடம் உலகைத் திறந்துவிடுகிற ஆங்கிலத்துக்குத்தான்.

இந்தியர்கள்தான் ஒரு வெளிநாட்டு மொழியைப் புகழ்கிறார்கள், கற்கிறார்கள், விட மறுக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். உண்மைதான். இந்தியர்களின் நிலை அப்படி. யோசித்துப் பார்த்தால் எளிதில் விளங்கும். ஆங்கிலேயர் காலந்தொட்டு கற்று வருகிறோம். அதிலேயே அடுத்தடுத்த நிலைகளையும் எட்டியிருக்கிறோம்.

ஒரு தமிழருக்கோ, ஒரு கன்னடருக்கோ, ஒரு தெலுங்கருக்கோ, ஒரு  மலையாளிக்கோ, ஆங்கிலம் அயல் மொழியென்றால் ஹிந்தியும் அவ்வாறே. ஆங்கிலத்தைக் கற்பதன் மூலம் உலகையும் தொடர்பு கொள்ள முடியும் என்கிறபோது, ஹிந்தியைக் கற்க வேண்டிய தேவை என்ன?

இந்தியா போன்ற ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கிற அளவுக்கு ஒரு சிக்கல் வருமானால், அனேகமாக அது பெரும்பாலும் உணர்வுபூர்வமான மொழி சார்ந்த பிரச்சினையால் மட்டுமே இருக்கும் - சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தாத வரையில்.

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, பிடிக்கிறதோ இல்லையோ இந்தியாவின் இணைப்பு மொழியாக எப்போதோ மாறிவிட்டது ஆங்கிலம்! ஒவ்வொரு மாநிலமும் மக்களும் அவரவர் தாய் மொழியில் அடுத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் எழுதினால், பேசினால் என்ன செய்ய முடியும்?

அந்தக் காலத்தில் ஆங்கிலம் இருந்ததா? என்றொரு வாதமும் அவ்வப்போது முன்வைக்கப்படும். அந்தக் காலத்தில் என்னதான் இருந்தது? இன்றைக்கு இருக்கிற – நம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத டூத் பிரஷ்ஷில் தொடங்கி – எதுதான் இருந்தது? இன்றைக்கு இவையின்றி இருக்க முடியுமா?

ஆங்கிலமே வேண்டாம், பேசவும் எழுதவும் வெட்கப்பட வேண்டும் என்ற அரசியல் தலைவர்களின் அணுகுமுறையும் பேச்சும் தேவையற்ற பிரச்சினைகளைத்தான் தோற்றுவிக்குமே தவிர நாட்டை முன்னகர்த்தும் எனக் கல்வியாளர்கள் பலரும் கருதவில்லை – இது சக்கரத்தைப் பின்சுழற்றும் முயற்சியாகவே முடியும்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டால் இந்திய மக்களாகிய நாம் கவலைப்படவும் வெட்கப்படவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் பட்டினிப் பட்டியல் கணக்கெடுப்பில் 127 நாடுகளின் பட்டியலில் 105-வது இடத்தில் இருக்கிறது இந்தியா! பசியில் இருப்போர் எத்தனை பேர்? பட்டினியில் சாவோர் எத்தனை பேர்?

நாள் தவறினாலும் தவறாத பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் எத்தனையெத்தனை?

உரிய மருத்துவம் கிடைக்காத சாவுகள்! சாலை விபத்துகள், ரயில் விபத்துகள், இப்போது விமான விபத்துகளில் தொடரும் உயிர்ப் பலிகள்! யோசிக்க யோசிக்க பட்டியல் நீண்டுகொண்டேதான் செல்லும்.

போகட்டும், ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம்!  

இதையும் படிக்க... சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்

தமிழ்நாட்டை ஆண்ட அரச மரபுகளில் குடைவரை, ஒருகல் தளி, கற்றளி என மூன்று வகைக் கோயில் கட்டமைப்புகளிலும் திறன் காட்டியவர்கள் பல்லவர்களும் பாண்டியர்களும். பல்லவர்களின் குடைவரைகளையும் ஒருகல் தளிகளையும் ஆராய்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே, மத்திய அரசு மற்றும் சார்ந்த துறைகளில் தமிழ் அறியாத பணியாளர்களைக் கொண்டுவந்து குவிப்பதன் மூலம் யார் என்ன சாதிக்க முனைகிறார்கள் எனத் தெரியவில்லை; ஆனால், அவதிப்படுவது என்னவோ மக்... மேலும் பார்க்க

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

உலக வா்த்தகத்தில் சுமாா் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமாா் ஒரு லட்சம் வா்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்ற... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

காலங்காலமாக நெரிசலில் சிக்கி உயிர்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் மீண்டுமொரு முறை பெங்களூரில் ஆர்சிபி கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மக்கள்... மேலும் பார்க்க

முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?

பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டா் அன்புமணிக்கும் இடையே நிா்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்ற தூண்டுதலில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதச் சென்று வெற்றிகொள்ள முடியாதபோது, தன்னையே முடித்துக் கொள்வதும் எதிர்காலத்தைத் தொலைக்க நேர்வதும் புதிதாகச் சிந்திக்க வேண்டி... மேலும் பார்க்க