``எனக்கு நடிக்கத் தெரியாதா?" -நடிகை அனுபமா வருத்தம்; சிம்ரன், நயன்தாராவிற்கும் இ...
பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்
தமிழ்நாட்டை ஆண்ட அரச மரபுகளில் குடைவரை, ஒருகல் தளி, கற்றளி என மூன்று வகைக் கோயில் கட்டமைப்புகளிலும் திறன் காட்டியவர்கள் பல்லவர்களும் பாண்டியர்களும். பல்லவர்களின் குடைவரைகளையும் ஒருகல் தளிகளையும் ஆராய்ந்து ஏற்கெனவே விரிவான நூல்களாகத் தந்திருக்கும் டாக்டர் இரா. கலைக்கோவன் குழுவினர் தற்போது மூன்றாம் நிலையான பல்லவர் கட்டுத்தளிகள் பற்றிய ஆகச் சிறந்த ஆவணத்தைப் பெரு நூலாகத் தந்திருக்கின்றனர்.
நூலில் மாமல்லபுரத்திலுள்ள ஆறு, காஞ்சிபுரத்தில் பதினொன்று, உத்தரமேரூரில் இரண்டு, பிற ஊர்களிலுள்ள பத்து என மொத்த 29 பல்லவர் கட்டுத்தளிகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக அதிநுட்பமான அவதானிப்புகளுடன் பதிவு செய்துள்ளனர். நிறைவில் முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கு நிகரான ஒப்பீடு என்ற இயலும் இடம் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு தளியையும் - கோயிலையும் நேரில் சென்று, நெருங்கி நின்று நாம் பார்த்தால்கூட கவனிக்க முடியாத அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகக் கவனித்து மிகச் சிறப்பாக நூல் நெடுகப் பதிவு செய்திருக்கின்றனர். சிற்பங்களைப் பற்றியும் சிற்பத் தொகுப்புகள் பற்றியுமான விவரிப்புகள் அலாதியானவை.
நூலின் முதல் கோயிலான மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோயிலிலேயே பல்லவச் சிறப்பான கருவறைத் திருமேனியின் பின்புறச் சுவரிலுள்ள சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதி பற்றிய கூர்ந்த அவதானிப்பும் விவரிப்பும் தொடங்கிவிடுகிறது. இந்த விவரிப்பே தொடர்ந்து, இராஜசிம்மேசுவரம் எனத் தொடங்கி, ஒவ்வொரு கோவிலைப் படிக்கும்போதும் புகைப்படங்களைப் பார்க்கும்போதும் இங்கே சோமாஸ்கந்தர் தொகுதி எவ்வாறு சிறப்புப் பெற்றிருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
கடற்கரைக் கோயில் வளாகம் பற்றிய இயலில் நாற்பதாண்டுகளுக்கு முன்னர்தான் வெளிப்பட்டது என்ற கூடுதல் தகவலுடன் பன்றிச் சிற்பத்தை அறிமுகப்படுத்தும் ஆசிரியர்கள், பன்றியின் கால்களுக்கிடையில் தாமரைகளும் இலைகளும் மீனும் அமைந்து அதைக் குளமாகக் காட்டுகின்றன என்பதைச் சுட்டி, புதியவர்களுக்குச் சிற்பத்தை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றனர். பன்றியின் வடபுற வேசரத் திருமுன்னின் கருவறைப் பின்சுவரில் நந்தி மீதமர்ந்து வீணை மீட்டும் சிவபெருமான், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் கருவறைப் பின்சுவரில் வேறெங்கும் அமையாதது.
இறை ஊர்தியைச் சிற்பமாக்கி, அதன் காலில் காவற்பெண்டை அமரவைத்து ஊர்தியின் வயிற்றுக்குள் உரிய வடிவத்தை வடித்துக்காட்டியிருக்கும் இந்தப் பல்லவப் பேராற்றலைத் தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் வேறெந்த இறைவடிவத்திற்கும் வேறெந்தச் சிற்ப மரபும் அமைக்கவில்லை என்பதே இவ்வளாகத்திலுள்ள சிம்மத் திருமுன்னின் தனிச் சிறப்பு என்கிறார்கள் ஆசிரியர்கள். இந்த சிம்மத்தின் மார்பிலுள்ள சதுரத் திறப்பின் வழி உள்ளே நோக்கினால் எருமைத் தலை மீது உத்குடியிலுள்ள மகிடாசுரமர்த்தினி காட்சி தருகிறார். ஆனால், இதனைப் பலரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
சத்தியசிம்மேசுவரத்தின் கோட்டத்தில் முப்புரம் எரித்த நிலையில் வலக்காலைத் தேருக்குள் ஊன்றி, இடக்காலை உயர்த்தித் தேர்த்தட்டிலிருத்தி கம்பீரமாக நிற்கும் இறைவனின் இதழ்களில் விரியும் மெல்லிய புன்னகையைச் சிறப்பாக அடையாளம் கண்டிருக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் மேல ராஜ வீதியில் கச்சபேசுவரர் கோயிலுக்கு அருகிலுள்ள ஐராவதேசுவரத்தைப் பேரழிவைச் சந்தித்துள்ள பல்லவ மணற் கற்றளி என அறிமுகப்படுத்துகின்றனர். இங்கே முகமண்டப வடசுவரில் உள்ளதைப் போல சுவரளாவிய நிலையில் விஷ்ணுவுக்குச் சக்கரம் அருளிய சிவனின் தோற்றம் தமிழ்நாட்டின் வேறெந்தக் கோவிலிலும் இல்லை.
தொடர்ந்து பிறவாதான் ஈசுவரம், இறவாதான் ஈசுவரம். இறவாதான் ஈசுவரத்திலுள்ள இராவண அருள்மூர்த்தி சிற்பம் இணையற்ற படைப்பு எனக் குறிப்பிடுவதுடன், கருடாசனத்தில் இருந்தவாறு தம் இருபது கைகளாலும் கயிலாய மலையைப் பெயர்த்தெடுக்கும் காட்சியை நேரில் பார்ப்பதைப் போன்றே விவரிக்கின்றனர். தவிர, இவ்வமைப்பு சோழர் காலத்திலும் பின்பற்றப்பட்டதைக் கொடும்பாளூர், கீழையூர், திருப்பூந்திருத்திக் கோயில்களுடன் ஒப்பிடுகின்றனர்.
பின்னாளைய திருப்பணிகளால் பல சிற்பங்களை இழந்திருந்தபோதிலும் அமைப்பில் பெரிய மாற்றங்களின்றி விளங்குவதுடன், இதன் மணல் கட்டுமானம் முழுவதுமாக மாறி செங்கல் கட்டடமாகிவிட்டிருக்கிறது திரிபுராந்தக ஈசுவரம்.
பல்லவர் கட்டுத்தளிகளில் விமானச் சுவரில் முருகன் இடம் பெறும் முதலிடமாக மதங்கேசுவரத்தைக் கொள்ளலாம் என்று குறிப்பிடும் ஆசிரியர்கள், முக்தேசுவரமும் இதைப் பின்பற்றியுள்ளதைத் தெரிவிக்கின்றனர். பல்லவர்களின் வேறெந்தக் கோயிலிலும் இடம்பெறாத சிறப்பாக இராவண அருள்மூர்த்திக் கதையின் இரு முதன்மைக் காட்சிகளும் முக்தேசுவரம் முகமண்டபத்தின் எதிரெதிர் சுவர்களில் இடம் பெற்றிருக்கின்றன.
நூலின் தனிச் சிறப்புள்ள இயல் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு மிக்கதுமான இராஜசிம்மேசுவரம் என்ற காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் பற்றி 103 பக்கங்களில் வண்ணப் படங்களுடன் விரிவும் ஆழமும் கொண்ட அதிநுட்பமான பார்வையுடன் அனைத்துச் சிறப்புகளையும் விளக்கியிருக்கின்றனர்.
கோயிலுக்குள் நுழைவதைப் போன்றே இவ்வியலுக்குள் நுழையும்போது, கோயில் வளாகத்தைப் பற்றிப் பறவைப் பார்வையில் அறிமுகம் செய்யப்படுகிறது. கோயில் வளாகத்திற்கு வெளியேயுள்ள கூரையற்ற நந்திப் பந்தலில் தொடங்குகிற அவதானிப்புகள் தொடர்ந்து முழுவீச்சில் ஒரே வேகத்தில் ஒட்டுமொத்த கோயிலையும் காட்சிப்படுத்திவிடுகின்றன.
கோயிலுடன் இணைந்தும் தனித்துமுள்ள எட்டு விமானங்களின் பெரும்பாலான கருவறைகளில் ஆவுடையாருடன் தாராலிங்கமும் பின்சுவரில் சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதியுமாக இருக்கின்றன. கோயில் வாயிலின் இருபுறச் சிற்பங்களில் சூலத்தேவரின் இடப்புறக் கோட்ட இருக்கைகளிலுள்ள சுகாசன ஆடவர்களில் வலக்கையைக் கடகத்திலும் இடக்கையை மடியிலும் கொண்டுள்ளவர் இராஜசிம்மராகலாம்; அதே அமர்வில் அதேபோல கைகள் அமைத்து அமர்ந்திருக்கும் மற்றொருவர் அவருடைய மகன் மூன்றாம் மகேந்திரவர்மராகலாம் என்று நூலாசிரியர்கள் அறிமுகப்படுத்துகின்றனர்.
தென்வாயில் தென்சுவரில் பதினாறு கைகளுடன் கூடிய வீராசனக் கொற்றவையை அச்சு அசலாகச் சித்திரித்துக் காட்டுவதுடன், இதுபோன்ற சிம்மத்தின் மீது வீராசனத்திலமர்ந்த கொற்றவையின் எழிலார்ந்த சிற்பம் வேறெந்த பல்லவக் கற்றளியிலும் இல்லை எனச் சிறப்பிக்கின்றனர்.
கிழக்குக் கோபுர வாயிலினும் அளவில் பெரிதாய்ச் சிற்பங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ள மேற்கு வாயில், கட்டப்பட்ட காலத்தே முதன்மை வாயிலாக விளங்கியிருக்கலாம் எனச் சுட்டும் ஆசிரியர்கள், சுற்றாலை (பிரகாரம்) இணைப்புச் சுவர், சுற்று விமான புறச்சுவர்களிலுள்ள சிற்பங்களை, சிறப்புகளை விளக்குகின்றனர்.
மந்தரமலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த கதை பிற பல்லவத் தளிகளில் இடம் பெறாத ஒன்று என்று குறிப்பிடுவதுடன், அப்பரும் சம்பந்தரும் விதந்து பேசுகிற இராவண கதை, இராஜசிம்மர் காலத்தில் சமூகத்தில் பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும் என்றும் இராஜசிம்மர் தளிகள் பலவற்றிலும் காணப்படும் இக்கதை இங்கேயும் இடம் பெற்றிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிக்க: உயிர்சுருட்டி: நூல் அறிமுகம் | விமர்சனம்
பாண்டியர், முத்தரையர் பகுதிகளில் குடைவரையிலேயே காட்சியாகும் எழுவர் அன்னையர் தொகுதி, பல்லவப் பகுதியில் இந்தத் தளியில்தான் முதன்முறையாக வெளிப்படுவதாகக் குறிப்பிடும் குழுவினர், தெற்கு விமானமொன்றின் பக்கச் சுவரில் காணப்படும் இந்திரன் – ஆறுமுகன் போர்க் காட்சியை தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் வேறெங்கும் பதிவாகாத முத்திரைச் சிற்பமென்கின்றனர். கயிலாசநாதர் கோயிலில் இவ்வாறாகப் பிற பல்லவத் தளிகளில் இடம் பெறாத, பிற தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம் பெறாத அரிய சிற்பங்கள் எண்ணற்றவை.
முதன்மை விமானத்துக்கும் கோபுர வாயிலுக்கும் இடைப்பட்டுத் தனி மண்டபங்கள் அமைக்கும் பழக்கம் இராஜசிம்மர் காலத்தில் வழக்கிலிருந்ததற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் கயிலாசநாதர் கோயிலும் மல்லைக் கடற்கரைக் கோயிலும்.
வடபுறத்தில் வலத் துணைக்கோட்டத்திலுள்ள இறைவியின் சிற்பத்தை இன்னதெனக் கொள்ள இயலவில்லை எனக் குறிப்பிடும் ஆசிரியர்கள், அறிஞர்கள் இரா. நாகசாமியும் கூ.ரா. சீனிவாசனும் பைரவியாகக் கொள்கின்றனர். ஆனால், பைரவிக்குள்ள பாசம், அங்குசம் இல்லை என்று தெரிவித்து, பல்வேறு இடங்களில் இவர்களுடைய கருத்துகள் தொடர்பான விளக்கங்களையும் மறுப்புகளையும் தெரிவிக்கின்றனர். காலம் காரணமாக ஒவ்வொருவர் பார்வையிலும் படுகிற தோற்றங்களில் மாற்றங்கள் தோன்றுவது மிகவும் இயல்பே.
சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதி, இராவண அருள்மூர்த்தி, யானையை அழித்த மூர்த்தி என பல்லவத் தளிகள் நூலுடன் உள்ளே சென்று ஒவ்வொன்றாகப் பார்த்தும் உணர்ந்தும் உள்வாங்கியும் ரசிக்க வேண்டியவை இராஜசிம்மேசுவர சிற்பங்கள், கட்டுமானங்கள்.
கயிலாசநாதர் கோயில் வளாகத்திலேயே இருக்கும் மகேந்திரவர்மேசுவரம் பற்றி விவரிப்பதுடன், முகமண்டபப் படிக்கட்டுகளின் பக்கச் சுவர்த் தலைப்பில் பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலை மகேந்திரவர்மேசுவர கிருகம் என்று அடையாளப்படுத்துவதாகக் குறிப்பிடும் ஆசிரியர்கள், ரணரசிக என்ற பட்டபெயர் காணப்படுவதாக இரா. சிவானந்தம் தெரிவிப்பது சரியல்ல என்று கறாராகத் தெரிவிக்கின்றனர்.
காஞ்சியின் வைணவக் கோயில்களில் கட்டடம், சிற்பம் இரண்டிலும் உச்சம் தொட்டிருக்கும் மணல்கல் தளி வைகுந்தப் பெருமாள் கோயில் என அறிமுகப்படுத்துகின்றனர். தற்போது முதல் தரைத் தளத்தின் கருவறையில் பெருமாள் சுகாசனத்திலும் இரண்டாம் தளத்தின் கருவறையில் விஷ்ணு பாம்பணைப் பெருமாளாக வடக்கில் தலைவைத்தும் மூன்றாம் தளக் கருவறையில் மகாராஜலீலாசனத்தில் பின்னாளைய விஷ்ணு சிற்பமும் இருக்கின்றன.
ஆனால், நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பின்னிணைப்பில் மூன்றாம் தளத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பதாகவும் கூ.ரா. சீனிவாசனும் இரா. சிவானந்தமும் கீழ்த்தளத்தில் அமர்ந்தும் இரண்டில் நின்றும் மூன்றில் படுத்தும் பெருமாள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதையும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை எவ்வாறு மாறியிருக்கும்? கவனிப்பில் பிழையா? அல்லது காலப் போக்கில் ஒருவேளை இவை மாற்றப்பட்டிருக்கலாமா? வாய்ப்புகள் இருக்கின்றன.
உத்தரமேரூரிலுள்ள மூன்று பல்லவக் கோயில்களில் சுந்தரவரதப் பெருமாள் கோயில், கயிலாசநாதர் கோயில் பற்றி விளக்கி, பெருமாள் கோயிலின் மூன்று தளங்களின் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிடுவதுடன், இங்குள்ள ரதி, மன்மதன் சிற்பங்கள் பிற பல்லவக் கோயில்களில் இல்லாதவை என்கின்றனர்.
காலத்தின் போக்கில் கோயில் பெயரும் கடவுளர்களின் பெயரும்கூட மாறிக்கொண்டே வரக் கூடியவைதான் போலும். இந்தக் கோயிலின் பெயர், கொங்கரையர் எடுப்பித்த ஸ்ரீவேலி விஷ்ணுகிரகம், கொங்கரையர் விஷ்ணு கோயில், ஸ்ரீவேலி விஷ்ணுகிரகம், இராஜேந்திரசோழ விண்ணகரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டுவந்திருக்கிறது. இறைவனின் பெயரும் அப்படியே, இராகவதேவர், வெள்ளைமூர்த்தி ஆழ்வார், ஸ்ரீகிருஷ்ணர், அந்தநாராயணர், புருஷோத்தமர், சொக்கப்பெருமாள்!
கயிலாசநாதர் கோயில் வளாகத்தில் சோழர், விஜயநகர அரசர் காலக் கல்வெட்டுகள் கிடைத்திருந்தபோதிலும் பல்லவர் காலக் கல்வெட்டுகளோ சிற்பங்களோ இல்லை. என்றாலும், பெருமாள் கோயிலையொத்த அமைப்பைப் பொருத்துத் தந்திவர்மர் காலத்தையது எனலாம் என்று சுட்டுகின்றனர்.
பின்னாளைய இணைப்புகளுடன் பெருவளாகமாக மாறியுள்ள தக்கோலம் ஜலநாதீசுவரம் திருவூறல் மகாதேவர் கோயிலில் விமானமும் முகமண்டபமும் பல்லவர் காலத்தன என்று குறிப்பிட்டு, கருவறை வாயில் மேல் பலகைச் சிற்பமாகக் காட்சியளிக்கும் சோமாஸ்கந்தர் தொகுதி தனித்துவமானது என்று ஆசிரியர்கள் சிறப்பிக்கின்றனர். இந்தக் கோயிலில் ஆதித்த சோழரின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு படியெடுக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் பிரமதேசத்திலுள்ள சந்திரமௌலீசுவரம் பற்றிய இயலில் இந்தக் கோயில் ஏன் முதலாம் இராஜேந்திர சோழரின் பள்ளிப்படையாகக் கருதுமாறு செய்கிறது என்பதை விளக்கி, பின்னர் கல்வெட்டுப் பதிவுகளுடன் இந்தக் கோயிலின் காலத்தை எடுத்துக்காட்டி முடிந்த முடிவாகக் கொள்ள வேண்டிய கோயில் பற்றிய கருதுகோளை வலுவாக நிறுவுகின்றனர்.
திருத்தணி வீரட்டானேசுவரத்தின் சிறப்பாக எலிமுக அடியவரை அறிமுகப்படுத்தி, விளக்கணாம்பூண்டி விசலேசுவரத்தை விஜயாலய சோழீசுவரமாக ஏன் சுட்டக் கூடாது என்பதும் விளக்கப்படுகிறது. திருவதிகை வீரட்டானேசுவரம் சிறப்புகளைப் பட்டியலிடும் நூலாசிரியர்கள், முற்றிலும் காஞ்சி கயிலாசநாதர் கோயிலைப் பின்பற்றியுள்ளமையால் இராஜசிம்மர் காலப் பணிகளில் ஒன்றாகக் கருதலாம் என்கின்றனர்.
சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீசுவர் கோயில் வளாகத்திற்குள்ளே வடபுறம் சற்று ஒதுங்கி அமைந்திருக்கும் பல்லவச் செல்வமான கயிலாசநாதர் கோயில் பற்றித் தரும் தகவல்களைப் படிக்க, இத்தனை சிறப்புகளா? என்று வியக்க வைக்கின்றன.
நூலில் விரிவாகப் படித்துணர வேண்டிய பகுதி, ஒட்டுமொத்தமாகப் பல்லவர் தளிகள் பற்றிய தலைசிறந்த ஆய்வேட்டுக்கு நிகரான, கட்டமைப்பு, சிற்பங்கள் என இரு பகுதிகளாக ‘ஒப்பீடு’ இயல் - பல்லவ மரபில் வீணையின் பெருமையே பெருமை!
நூல்நெடுக முக்கியமான சிற்பங்கள் பெரும்பாலானவற்றின் வண்ண மற்றும் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் ஆங்காங்கேயும் தனித்தொகுப்பாகவும் இணைக்கப்பட்டுள்ளன (பனுவலில் படங்கள் இருக்கும் பக்கத்தின் எண்களைத் தந்திருந்தால் புதிய வாசகர்களுக்கு அடையாளங் காண எளிதாக இருந்திருக்கும்).
இதையும் படிக்க: திருமகள் இலக்கணம்: நூல் அறிமுகம் | விமர்சனம்
பல்லவர், பாண்டிய, சோழர் கோயில்களுடன் உறவேற்பட்ட விதம் பற்றியும் ஆசிரியராக உருவகித்துக் கொண்ட கூ.ரா. சீனிவாசனின் எழுத்தும் பேச்சும் தொல்லியல் துறைச் சிற்பி இராமனுடனான பழக்கமும் எவ்வாறு தங்களை வளர்த்தெடுத்தது என்பது பற்றியும்
ஒவ்வொரு காலகட்டத்தில் செய்த ஆய்வுகளும் நூல்களாக வெளிவந்தபோது ஏற்பட்ட தெளிவுகளும் பேராசிரியர்கள் கோ. வேணிதேவி, சீ. கீதா, அர. அகிலா, மு. நளினி ஆகியோருடன் மேற்கொண்ட கள ஆய்வுகள் பற்றியும்
பல்லவ கட்டுத்தளிகளைப் பற்றிய அவர்தம் காலத்து நிலையறிய உதவிய அலெக்சாந்தர் ரியா, லாங்ஹர்ஸ்ட், கலைவண்ணம் பற்றியறிய உதவிய மைக்கேல் லாக்வுட், நாகசாமி, பல்லவர் தளிக் கல்வெட்டுகள் பற்றியறிய பேராசிரியர் டி.வி. மகாலிங்கத்தின் நூல்கள் துணைநின்றதையும்
சில கோவில்கள் ஏன் இந்தப் பட்டியலில் விடப்பட்டன என்பது பற்றியும்
முன்னுரையில் குறிப்பிட்டுள்ள இரா, கலைக்கோவன், எது சரியோ அது நிலைக்கும். வெளிச்சமாக வீறிடாவிடினும் விடியலாகவேனும் இந்நூல் விளங்குமாயின் மகிழ்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
உள்ளபடியே கலைக்கோவன், டாக்டர்தான்; பலரும் நினைத்திருப்பது போல முனைவர் அல்லர். கண் மருத்துவர். வரலாற்றின் மீதும் கோவில் கலை, கல்வெட்டுகள் மீதும் கொண்ட ஆர்வத்தின் காரணமாகக் கோவில் கலை வரலாற்றறிஞராகப் பரிணமித்தவர்.
நூலில் எழுத்துப் பிழைகளே இல்லை என்பதும் பெரும் வியப்பு, இன்றைய சூழலில் நினைத்தும் பார்க்க முடியாதது (ஒரேயொரு இடத்தில் ஒற்றுப் பிழையெனத் தோன்றுகிறது. ஆனால், இதுபற்றி மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன). தமிழில் இப்போதெல்லாம் எதைப் பற்றிய அக்கறையுமில்லாமல் கலந்துகட்டி வரும் ஒரு, ஓர் என்ற சொற்கள்கூட எங்கேயும் மாறாமல் மிகச் சரியாக எழுதப்பட்டிருக்கின்றன. அச்சும் கட்டமைப்பும் சிறப்பு.
முழு நூலையும் படித்து முடிக்கும்போது நம்ப முடியாத ஒரு மாபெரும் வியப்புதான் மேலிடுகிறது. ஆண்டுக்கணக்கில் உள்ளத்தில் ஊறி ஊறிக்கிடந்த இந்த நூலுக்கான கடும் உழைப்பு ஈடு இணையற்றது.
நூலை ஒரு முறை படித்துவிட்டு, கையுடன் நூலையும் நூலாசிரியர்கள் அறிமுகப்படுத்தும் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு சென்றால், சுற்றுலாவாகக் கோயில் கோயிலாகச் சென்று ஆற அமர இருந்து ரசித்துவிட்டு வரலாம்.
இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் என்ற வள்ளுவரின் வரிகளை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் தமிழறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனாரின் மகனான டாக்டர் இரா. கலைக்கோவனும், அவருடைய குழுவினரும். பல்லவர் தளிகளின் மீது பேரொளியைப் பாய்ச்சுகிறது, காலத்துக்கும் கலைக்கோவன் பெயர் சொல்லும் ஆகச் சிறந்ததான இந்த நூல்.
பல்லவர் கட்டுத்தளிகள் – சீ. கீதா, மு. நளினி, இரா. கலைக்கோவன், பக்கங்கள் – 472, விலை ரூ. 2,000, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்குச் சாலை, தில்லை நகர் மேற்கு, திருச்சி – 620 018