குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்டும் சேர்த்து அடக்கம்
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உத்தர்சந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் பார்மர்(18). இவருக்கு ராயல் எல்பீல்டு புல்லட் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.
எங்குச் சென்றாலும் அவர் தனது புல்லட்டில்தான் பயணம் செய்வார். பார்மர் தனது புல்லட்டில் சென்று கொண்டிருந்தபோது கிராமத்திற்கு வெளியில் டிராக்டர் ஒன்றின் மீது புல்லட் மோதிக்கொண்டது.
இதில் பார்மர் படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். 12 நாட்கள் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் பார்மர் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
பார்மருக்கு புல்லட் மீது தீராத மோகம் இருந்தது. இதையடுத்து பார்மர் உடலுடன் அவர் பயன்படுத்திய புல்லட்டையும் சேர்த்துப் புதைக்க முடிவு செய்தனர்.
அதற்குத் தக்கபடி குழி தோண்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறவினர்கள், ஊர் மக்கள் சூழ பார்மர் உடலுடன் புல்லட்டையும் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். புல்லட் மட்டுமல்லாது அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அவருடன் சேர்த்துப் புதைத்தனர்.
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இது குறித்து பார்மர் தந்தை சஞ்சய் கூறுகையில், ''பார்மருக்கு எல்லாமே அவன் பயன்படுத்திய புல்லட்தான். எனவேதான் அவனது ஆத்மா சாந்தியடைய அவன் பயன்படுத்திய புல்லட்டையும் சேர்த்துப் புதைக்க முடிவு செய்தோம்.

தான் இறந்தாலும் பைக் தன்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்பினான்''என்றார்.
கிரிஷ் பார்மர் சமீபத்தில்தான் 12வது வகுப்பு படித்து முடித்தார். அட்மிஷன் தொடர்பாக கல்லூரியில் விண்ணப்பித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது டிராக்டர் மீது புல்லட் மோதியது. கிரிஷ் குடும்பத்தில் காரும் இருக்கிறது. ஆனால் புல்லட்டைத்தான் எப்போது கிரிஷ் ஓட்டுவது வழக்கம்.