கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின் சக்கரங்கள் துண்டாகி தனியே சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றன.
மதுரையிலிருந்து சென்ற அரசுப் பேருந்தின் இரண்டு சக்கரங்கள் சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர். இது போன்ற செய்திகளை இதுவரை நாம் பார்த்ததில்லை, இந்த ஆட்சியின் நிலையை அறிய இது ஒன்றே போதும்.

அதிமுக ஆட்சியிலிருந்துதான் தமிழகத்தில் 39 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது, கீழடி அகழாய்வு எனும் பிள்ளையைப் பெற்றது அதிமுக, அதற்கு திமுக பெயர் சூட்டுகிறது.
கீழடி அகழாய்வுக்கு முக்கியத்துவம் தந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. திமுக ஆட்சியில் நடைபெறும் பிரச்னைகளை மடைமாற்றுவதற்காக கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு ஆதாரம் கேட்டதைப் பேசி வருகிறது.
கீழடி அகழாய்வைப் பொதுவாகப் பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.
மத்திய அரசு விளக்கம் கேட்பது நடைமுறையில் உள்ளதே. அதில் திமுக விளம்பரம் தேடுகிறது, அதிமுக ஆட்சிக் காலத்தில் எங்களிடமும் விளக்கம் கேட்டிருக்கிறார்கள், அப்போதைய அரசுச் செயலாளர் உதயசந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார், மத்திய அரசு அகழாய்வில் விளக்கம் கேட்பதற்கு திமுக அரசு ஏன் குதிக்கிறது?

ஆணவத்தின் உச்சத்தில் உள்ள அமைச்சர் டிஆர்பி ராஜாவைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம், அதிமுகவை ஒரு முறை விமர்சித்தால், நாங்கள் நூறு முறை விமர்சிப்போம்.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுபடுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமியைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்" என்றார்.