தேனிலவு கொலை: முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக இந்தூரில் சொத்து வியாபாரி கைது
மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக இந்தூரைச் சேர்ந்த சொத்து வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
"ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகக் கூறி, இந்தூரைச் சேர்ந்த சொத்து வியாபாரி ஷிலோம் ஜேம்ஸை மேகாலயா போலீஸார் கைது செய்துள்ளனர்," என்று கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோதியா பிடிஐயிடம் தெரிவித்தார்.
கொலைக்குப் பிறகு, இந்தூரின் தேவாஸ் நாகா பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் சோனமின் பையை மறைத்து வைத்ததாக ஜேம்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அந்தப் பையில் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தூரில் சொத்து மேலாண்மை நிறுவனத்தை நடத்தும் ஜேம்ஸ், கொலையில் தொடர்புடைய விஷால் சௌகானுக்கு இந்த பிளாட்டை வாடகைக்கு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.
அப்போது, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டது. ராஜ் குஷ்வாஹாவின் ஏற்பாட்டில், மேகாலயாவுக்குச் சென்ற கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது சோனமும் உடன் இருந்துள்ளார். சோனம் ரகுவன்ஷியை உத்தர பிரதேசத்திலும் அவரது காதலர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை மத்திய பிரதேசத்திலும் மேகாலயா போலீசார் கைது செய்தனர்.