"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" - அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?
இந்தியாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஜூன் 16ம் தேதி வெளியான இந்த ஆலோசனை அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் குற்றங்களும் பயங்கரவாதமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
"பாலியல் வன்புணர்வு இந்தியாவில் வேகமாக வளரும் குற்றங்களில் ஒன்றாக இருக்கிறது. பாலியல் அத்துமீறல்களும் வன்முறையும் சுற்றுலாத் தளங்கள் மற்றும் பிற இடங்களிலும் பெருகியுள்ளன.
பயங்கரவாதிகள் சிறிய எச்சரிக்கையுடன் அல்லது திடீரென தாக்கக்கூடும். அவர்கள் சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள்/ஷாப்பிங் மால்கள், அரசு மையங்களைக் குறிவைக்கின்றனர்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்தியாவின் கிராமப் புறங்களில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர உதவி வழங்க அரசிடம் குறைந்த திறனே உள்ளது. கிழக்கு மகாராஷ்டிரா வடக்கு தெலுங்கானாவிலிருந்து மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் வரை ஆபத்தான பகுதிகள் நிறைந்திருக்கின்றன.
இந்த அபாயத்தைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்கர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல சிறப்பு அங்கீகாரம் பெற வேண்டும்" என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜி.பி.எஸ் சாதனங்கள் அல்லது சேட்டிலைட் போன்கள் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும், பிடிபட்டால் 20,000 டாலர்கள் அபராதம் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், "தனியாகப் பயணிக்காதீர்கள், குறிப்பாக நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால்..." என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்கக் குடிமக்களுக்குத் தெரிவித்துள்ளது அந்தநாட்டு வெளியுறவுத்துறை.
குறிப்பாகப் பின்வரும் மாநிலங்களுக்குப் பயணிக்கையில் சிறப்பு அனுமதிப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பீகார்
ஜார்கண்ட்
சத்தீஸ்கர்
மேற்கு வங்கம்
மேகாலயா
ஒடிசா

இந்த மாநிலங்களின் தலைநகரங்களுக்கு மட்டும் செல்வதாக இருந்தால் சிறப்பு அனுமதி தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.
"இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்கள் மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதிக்கும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கும் பயணிக்க அனுமதி பெற வேண்டும்.
குடியேற்றம் தொடர்பான நெருக்கடியால் தடுப்புக்காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்தியா-நேபாள எல்லையைத் தரைவழியாகக் கடக்க வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவற்றுடன் மணிப்பூர் செல்லவும் அனுமதி தேவை எனக் கூறியுள்ளனர்.