தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: தப்பிய கார்!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயர் வெடித்து லாரி தீப்படித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆரணி வழியாக நேற்றிரவு வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது திடீரென லாரியின் டயர் வெடித்ததாகவும் இதனால் லாரி கணியம்பாடி அரசுப் பள்ளி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றி வெடித்துள்ளது. சாலையில் கொட்டிய டீசலும் பற்றி எரிந்துள்ளது. இதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி தீ செல்வதை கண்ட கார் உரிமையாளர் விரைவாக செயல்பட்டதால் கார் மற்றும் இருசக்கர வாகனம் தப்பியுள்ளது.
மேலும் லாரி ஓட்டுநர் தப்பி செல்லும் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தீயானது லாரி முழுவதும் பரவியதில் லாரி முற்றிலும் எரிந்துள்ளது.
இதனை அறிந்த ஓட்டுநர் லாரியில் இருந்து தாவி குதித்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கணியம்பாடி காவல் துறையினர் சாலையின் நடுவே எரிந்து நாசமான லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் ஆரணி வேலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
மேலும் இவ்விபத்து குறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பியோடைய ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜய்க்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பூவே உனக்காக!