மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை
மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார்.
இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக்கமான வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. இதனால் பெண் பைலட் சந்தேகப்பட்டார். நடுவழியில் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி இரண்டு பேரை ஏற்றிக்கொண்டார்.
அவர்கள் டாக்சியில் இருந்த பெண் பைலட்டை பாலியல் தொந்தரவு கொடுத்தனர். உடனே அப்பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் இரண்டு பேரில் ஒருவன் அப்பெண்ணை மிரட்டினார். அதற்குள் போலீஸ் செக்போஸ்ட் ஒன்றை டாக்சி நெருங்கியது.

இதனால் போலீஸ் செக்போஸ்ட்டிற்கு முன்பாகவே ஓட்டுநர் வண்டியின் வேகத்தைக் குறைத்தார். உடனே நடுவழியில் ஏறிய இரண்டு பேரும் இறங்கி ஓடிவிட்டனர். பெண் பைலட் போலீஸ் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் டாக்சி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பெண் பைலட் தான் கொடுத்துள்ள புகாரில், ''எனது கணவரை சர்ச்கேட் ரயில்நிலையத்தில் இரவில் பார்க்கச் சென்று இருந்தேன். அவர்தான் டாக்சியை மொபைல் ஆப் மூலம் புக் செய்தார். இரவு 10.45 மணிக்கு டாக்சியில் ஏறிச் சென்றபோது ஓட்டுநர் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் வேறு வழியில் சென்றார்.
திடீரென நடுவழியில் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டார். அதில் ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் பின்புறம் எனது அருகில் ஏறிக்கொண்டார். எனது அருகிலிருந்த நபர் எனது ஒரு கையைப் பிடித்தார்.
உடனே நான் கத்தினேன். முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அமைதியாக இருக்கும்படி என்னை மிரட்டினார். அந்நேரம் என்னுடன் இருந்த நபர் மெதுவாகக் கையை எனது தொடையை நோக்கிக் கொண்டு வந்தார். ஓட்டுநர் எதுவும் சொல்லாமல் இருந்தார். அந்நேரம் சாலையோர போலீஸ் செக்போஸ்ட் வந்தது.

உடனே இரண்டு பேரும் இறங்கிச் சென்றுவிட்டனர். அந்நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. நான் எனது வீட்டிற்குச் சென்றதும் ஓட்டுநரிடம் இரண்டு பேரும் யார் என்று கேட்டேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
மறுநாள் அவர் தனது கணவரோடு சென்று இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டாக்சி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.