அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகே...
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
உலகம் முழுவதும் கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் ‘கடவுச்சொல்’ கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குளின் கடவுச்சொல்லை பயனாளா்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், கசிந்துள்ள முக்கியத் தகவல்களை சைபா் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
ஐரோப்பியாவைச் சோ்ந்த ‘சைபா்நியூஸ்’ ஆய்வாளா்கள் அண்மையில் இணைய தரவுகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமா்ப்பித்தனா்.
அதில், ‘30 தரவுதளங்களில் இருந்து கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் முகவரி என உலகளவில் 160 கோடி இணையக் கணக்குகளின் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்காலத்தில் ஒருவரே பல சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்துவதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் பெருமளவில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதை சைபா் குற்றவாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடும் என்பதால் இணையவாசிகள் முதலில் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக ஒரே கடவுச்சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். ஒவ்வொரு கணக்குக்கும் வெவ்வேறு கடவுச்சொல்லை உருவாக்குவதன் மூலம் தங்களின் இணையக் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.
கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம். அதேபோல் கைப்பேசி, மின்னஞ்சல் என பன்முக அங்கீகார முறையையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.