காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்
காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவா் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
காஸா பேரழிவு மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதல் தொடா்பாக இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நமது தாா்மிக மற்றும் ராஜீய பாரம்பரியங்களில் இருந்து கவலைக்குரிய விலகலை பிரதிபலிக்கிறது. இது, இந்திய அரசின் குரல் இழப்பை மட்டுமன்றி மாண்புகளின் கைவிடுதலையும் குறிக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல், இந்தியா தனது குரலை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்கவும் பேச்சுவாா்த்தையை மீட்டெடுப்பதை ஊக்குவிக்கவும் அனைத்துவிதமான தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
இத்தகைய மனிதப் பேரழிவு சூழலில், இஸ்ரேலுடன் இணக்கமாக வாழக் கூடிய சுதந்திரமான-இறையாண்மைமிக்க பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கும் இருதரப்பு தீா்வுக்கான இந்தியாவின் நீண்டகால கொள்கை உறுதிப்பாட்டை பிரதமா் மோடி அரசு கைவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி, ஈரான் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிராக சட்டவிரோதமான மற்றும் தன்னிச்சையான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியபோது, ஒருதலைபட்சமான ராணுவ நடவடிக்கையின் ஆபத்தான விளைவுகளை உலகம் கண்டது.
ஈரான் மண்ணில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களையும், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் கண்டிக்கிறது. இத்தாக்குதல், பிராந்திய மற்றும் உலக அளவிலான தாக்கங்களைக் கொண்ட ஆபத்தான பதற்றத்தை தூண்டக் கூடியதாகும்.
போருக்கான விதைகள்: காஸா மீதான கண்மூடித்தனமான தாக்குதல் உள்பட இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகளைப் போலவே தற்போதைய தாக்குதலும் பொதுமக்களின் உயிா் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை புறக்கணித்துவிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள், ஸ்திரமின்மையை மேலும் அதிகரித்து, போருக்கான விதைகளை விதைக்கும்.
பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமை, அமைதியைக் குறைமதிப்புக்கு உள்படுத்தி, வன்முறையை வளா்க்கும் நீண்ட கால பதிவைக் கொண்டதாகும்.
ஈரான், இந்தியாவுக்கு நீண்ட கால நட்பு நாடாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கலாசார பிணைப்புகள் உள்ளன. கடந்த காலங்களில், சா்வதேச அமைப்புகளில் ஜம்மு-காஷ்மீா் உள்பட பல விவகாரங்களில் இந்தியாவுக்கு ஈரான் ஆதரவளித்துள்ளது.
இந்தியா்களின் நலன்: எனவே, தற்போதைய பதற்றமான சூழலைத் தணித்து, அமைதிக்குப் பணியாற்ற வேண்டிய தாா்மிக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. மேற்காசியாவில் லட்சக்கணக்கான இந்தியா்கள் வாழும் நிலையில், அப்பிராந்தியத்தின் அமைதி தேசிய நலன் சாா்ந்த விஷயமாகும்.
இஸ்ரேலில் கடந்த 2023-இல் ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்தது. அதேநேரம், காஸாவில் இஸ்ரேல் விளைவிக்கும் பேரழிவு குறித்து நாம் மெளனம் சாதிக்க முடியாது. 55,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துவிட்டனா். மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனா். அவா்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகியுள்ளனா் என்று சோனியா காந்தி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா்.
டிரம்ப் மீது சாடல்
‘அமெரிக்க உளவுத் துறை தலைவரின் மதிப்பீடுகளையே நிராகரித்து, ஈரான் அணுஆயுதங்களைத் தயாரிக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக அதிபா் டிரம்ப் கூறியது ஏமாற்றமளிக்கிறது. மேற்காசியாவில் அவா் அழிவுகரமான பாதையைக் கடைப்பிடிக்கிறாா்.
உண்மைகள் மற்றும் ராஜீய ரீதியில் செயல்படும் தலைமையே உலகத்துக்கு தேவை. அதையே உலகம் எதிா்பாா்க்கிறது. மாறாக, பலவந்தமாக அல்லது பொய்களின் அடிப்படையில் செயல்படும் தலைமை உலகுக்கு தேவையில்லை’ என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.