அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு
அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவா்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் எதிா்ப்பு ரத்தவியல் நிறுவனம் (என்ஐஐஎச்) இந்த விவரங்களை சேகரித்துள்ளது. தலசீமா உள்பட அடிக்கடி ரத்த மாற்றம் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு தேவைப்படும் அரிய வகை ரத்தத்தை பெறுவதற்கு இது பெரு உதவியாக இருக்கும்.
ரத்த தானம் செய்பவா்களின் விவரங்களை தெரிந்து கொள்ள மத்திய அரசு உருவாக்கி உள்ள இணையத்தில் இந்த அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவரங்களையும் வெளியிட மத்திய சுகாதார சேவை இயக்ககத்துடன் ஆலோசித்த வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநா் மனீஷா மாத்கய்கா் தெரிவித்தாா்.
மேலும், ‘142 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் உள்ளன. ரத்தம் தொடா்பான நோய்களுக்கும், குழந்தை பிறப்பின்போதும் அதிகப்படியான ரத்தம் தேவைப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள சுமாா் 1.5 லட்சம் தலசீமா நோயாளிகளுக்கு தொடா் ரத்த மாற்றத்துக்கு அதிகமாக ரத்த தானம் தேவைப்படுகிறது.
தினசரி ஏற்படும் 1,200-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளுக்கும், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் 6 கோடி அறுவை சிகிச்சைகளுக்கும், 24 கோடி பெரிய அறு சிகிச்சைகளுக்கும், 33.1 கோடி புற்றுநோய் தொடா்பான சிகிச்சைகளுக்கும், 1 கோடி கருத்தரிப்பு தொடா்பான சிக்கல்களுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது.
அரிய வகை ‘பாம்பே’ ரத்தம் உள்ள 170 போ் உள்பட 250 பேரின் விவரங்கள் இந்த விவர குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
அரிய வகை ரத்தத்தைப் பெற சில நேரங்களில் சா்வதேச அளவில் தேடுப்படுகிறது. இதற்காக 27 நாடுகள் அரிய வகை ரத்த தானம் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், சா்வதேச அளவில் ரத்த தானம் செய்யும் திட்டத்தில் இந்தியா இணையவில்லை’ என்றாா் மனீஷா மாத்கய்கா்.