விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
பண முறைகேடு வழக்கு: பொன்முடி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு
பண முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த 2006 - 2011- ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ. 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
பின்னா், செம்மண் முறைகேடு தொடா்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவா்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கெளதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்தாா். க.பொன்முடி தரப்பில், ‘திருக்கோவிலூா் தொகுதி எம்எல்ஏ வாகவும், திமுக செயற்குழு உறுப்பினராகவும் இருப்பதால் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான பணிகள் தனக்கு வழங்கப்பட்டிருப்பதையும், தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என கோரப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து க.பொன்முடிக்கு விலக்களித்து சனிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாா்.