வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்
அதிமுக பராமரிக்காமல் இருந்த வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி, சமூக நீதியை நிலைநாட்டியதற்காக மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று நடைபெற்ற நன்றி பாராட்டும் விழாவில் அவர் ஆற்றிய உரையில், இந்தக் கலைக் கருவூலத்தைதான் நாம் இப்போது 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திருக்கிறோம்! பொதுவாக, தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் என்று சொன்னால், அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டுவிடுவார்கள்.
நாம் உருவாக்கிய கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள். அப்படி கவனிப்பார் இல்லாமல் இருந்த இந்த வள்ளுவர் கோட்டத்தை, இப்படி புதுப்பொலிவோடு மீட்டெடுத்து இருக்கிறோம்! அதை செய்து காட்டிய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நான் மனதார பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
தலைநகர் சென்னையின் மைய மண்டபமாக ஆயிரத்தி 400 பேர் அமரக்கூடிய மாபெரும் கூட்ட அரங்கத்தோடு அமைந்திருக்கின்றது. இந்த தமிழ்க் கோட்டத்தை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்! பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை. உங்கள் அன்புக்காகதான் நான் பங்கெடுத்திருக்கிறேன்!
இத்துடன் முத்தாய்ப்பாகதான் உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்று மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கியிருக்கிறோம்!
இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.
மாவட்ட வாரியாக, ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கின்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போல மதிப்பூதியம் வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு உள்ள கடமைகள் மற்றும் அதிகாரங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதனால், உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!
இன்றைக்கு மாற்றுத் திறனாளிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள், விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். சமூகத் தடைகளை உடைத்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சவால்களை வென்று வருகிறார்கள். பிறப்பினாலோ, உடல்நலக் குறைவாலோ அல்லது விபத்தினாலோ பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பிலிருந்து மீளமுடியும், மற்றவர்களைப் போல நாங்களும் வெல்ல முடியும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறீர்கள். இத்தகைய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
“முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்று சொன்னார் வள்ளுவர். முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதை உண்மையில் நிரூபித்து வருகிறவர்கள் மாற்றுத் திறனாளிகள்தான். உங்களுக்கு நான் சொல்வது, உங்களுக்கு நான் இருக்கிறேன்; இந்த அரசு இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது என்னுடைய கடமை!
இது எல்லாருக்குமான ஆட்சி, எல்லாரையும் முன்னேற்றுகின்ற ஆட்சி. அதனால்தான் சில வகுப்புவாத சக்திகளால் அவர்களுக்கு துணை போகின்ற கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லோரும் முன்னேறக் கூடாது; எல்லார்க்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது; சமத்துவம் உருவாகக் கூடாது என்று நினைக்கின்ற வகுப்புவாதிகள்தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள்!
அதையெல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது, நீங்களும் – மக்களும் தருகின்ற அன்புதான்! அந்த வகையில், என் மனதுக்கு இதமாக இத்தகைய விழாவை ஏற்பாடு செய்திருக்கின்ற மாற்றுத் திறனாளி சகோதார சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!