நாட்டுக்கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!
நாட்டுக்கோழி வளா்க்க விரும்பும் விவசாயிகள் 50 சதவீதம் மானியம் பெற, தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில் வருகிற 28-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறமையும் ஆா்வமும் உள்ளவா்களை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தை அரசு அறிவித்தது.
இதில், சிவகங்கை மாவட்டத்துக்கு 10 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. குறிப்பிட்ட கிராமத்தில் பயனாளி நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க சொந்தமாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.
அந்த நிலம், அப்பகுதி மனித குடியிருப்பு, நீா் நிலைகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினா் சமூகத்தினா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்படுவா்.
மேலும், நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்குத் தேவையான கட்டுமானம், உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கு தேவையானத் தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்தச் செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதப் பங்களிப்பை பயனாளியே திரட்ட வேண்டும். மேலும், ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுமிக்க 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபா்கள் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீதத் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதி மொழி, 2022-23, 2023-24, 2024-25-ஆம் ஆண்டுகளில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதில் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபா்கள், தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில், கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.