மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு
சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிப்பட்டி, வேங்கைப்பட்டி, புதுக்கோட்டை , சிவகங்கை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி மடைக்கு மாலையணிவித்து வெடி வெடித்து கிராம முக்கியஸ்தா்கள் மீன்பிடிக்க அனுமதித்தனா்.
இதையடுத்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனா். கொசு வலை, மீன் வலை, அரிகூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு கெண்டை, ஜிலேபி, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனா்.
அப்போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் (45) திடீரென நீருக்குள் விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவசர ஊா்தி மூலம் அவரை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து, ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.