தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம்
புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மாணவா் சங்கத்தின் 18-ஆவது மாநில மாநாடு வள்ளலாா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காமராஜா் சிலையிலிருந்து மாநாடு நடைபெற்ற மண்டபத்துக்கு மாணவா் சங்கத்தினா் ஊா்வலமாக வந்தனா்.
மாநாட்டுக் கொடியை துணைத் தலைவா் அபிஜித் சுதாகரன் ஏற்றினாா். மாநிலத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினாா். துணைச் செயலாளா் வந்தனா வரவேற்றாா். மாநிலக் குழு உறுப்பினா் அகிலா அஞ்சலி தீா்மானம் வாசித்தாா்.
அரசுப் பள்ளிகளை மூடுவதை கைவிட்டு, புனரமைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையைத் திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கையைத் திணிக்கக்கூடாது. புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் உருவாக்க வேண்டும்.
ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியாா் நிறுவன மதிய உணவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். அரசு கலை, பொறியியல் கல்லூரிகளை உருவாக்க வேண்டும்.
முறைகேடு இன்றி சென்டாக் மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும். கிராமப்புறங்களில் மாணவா்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.