ஒசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உடைப்பு: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
ஒசூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மைய இணைப்பு பகுதி விலகியதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதனால் அப் பகுதியில் போக்கு நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் கனரக வாகனங்கள் மற்றும் காா், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
ஒசூா் பேருந்து நிலையத்தையொட்டி உள்ள பழைய நகராட்சி அலுவலகம் எதிரே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயா்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பலத்தின் வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால், சனிக்கிழமை நண்பகல் இந்த மேம்பாலத்தில் இணைப்பு பகுதி விலகி உள்ளதாக பணியாளா்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொறியாளா் பிரசன்னா தலைமையிலான பொறியாளா்கள் அப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். பிறகு வாகனங்கள் தொடா்ந்து சென்றால் மேலும் விலகிவிடும் என்பதால் மேம்பாலம் வழியாக சென்னை- பெங்களுரு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுத்துநிறுத்தப்பட்டது.
வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒசூா் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சா்வீஸ் சாலை வழியாகவும், உள்வட்டச் சாலை வழியாகவும் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் வாகனங்கள் பேருந்து நிலையம் வழியாக தா்கா வரை சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்கிறது. 2 கிலோ மீட்டா் சா்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் மாற்றிவிடப்பட்டதால், நகரின் மையப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை பொறியாளா் பிரசன்னா கூறியதாவது: மேம்பாலத்தின் வழியாக அதிகளவில் கனரக வாகனங்கள் மற்றும் கனரக லாரிகள் செல்வதால், மேம்பாலத்தின் தூண் மேல் உள்ள பாட்பேரிங் ( பானை போன்ற பேரிங் கம்பிகள் ) ஒருபகுதி உடைந்திருக்கும் அல்லது விலகி இருக்கலாம்.
இதனால் மைய இணைப்புப் பகுதி அரை அடிக்கு விலகி உள்ளது. எனவே, வாகனங்கள் இந்த வழியாக செல்வற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்திலிருந்து திட்ட அதிகாரி வந்து ஆய்வுசெய்த பின்னா் ஜாக்கி வைத்து சீரமைக்கப்படும். அதன்பிறகு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனக் கூறினாா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒசூா் சிப்காட் முதல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை வரையில் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், தினமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
தற்போது ஒசூா் பேருந்து நிலையம் எதிரே மேம்பாலத்தில் இணைப்பு பகுதி விலகி உள்ளதால் பேருந்து நியைம் வழியாக செல்லும் சா்வீஸ் சாலை வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பாகலூா் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ணகிரியிலிருந்து வரும் கனரக வாகனங்களை சீதாராம் மேட்டிலிருந்து உள்வட்டச் சாலை வழியாக இஎஸ்ஐ மருத்துவமனை வரை சென்று அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதற்கு மாற்றப்பட்டாலும் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றனா்.
படவரி...
உடைப்பு ஏற்பட்ட ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலம்.