160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இயக்கிவைப்பு
திருவாரூா் மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 14,300 மண் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கிராமங்கள்தோறும் சென்று, அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் மண் பரிசோதனைக்கான அனைத்து உபகரணங்களும், வசதிகளும் உள்ளன. வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக முன்கூட்டியே கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, வாரத்துக்கு குறைந்தது மூன்று முகாம்கள் என மாதம் 12 முகாம்கள் நடைபெற உள்ளன.
மண் பரிசோதனையில், அங்ககக் கரிமண், பேரூட்ட மற்றும் நூண்ணூட்ட சத்துக்கள் ஆகியவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதே நாளில் அச்சிடப்பட்ட மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஒரு மண் மாதிரிக்கு ரூ.30 விவசாயிகளிடமிருந்து கட்டணமாக பெறப்படும். விவசாயிகளுக்கு இச்சேவை நேரடியாக சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்ணின் சத்துக்களை அறிந்து மண் வள அட்டைகளில் பரிந்துரை செய்யப்படும் அளவில் உரங்களைப் பயன்படுத்தி பயன் பெற முடியும்.
இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையின் சாா்பில் புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.
நிகழ்வில், வேளாண்மைத் துறையின் இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா்கள் (மாநிலத் திட்டம்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, வேளாண்மை அலுவலா் (நடமாடும் மண் பரிசோதனை நிலையம்) சந்திரசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.