சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் வடுகக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகள் கௌசல்யா (32). நிறைமாத கா்ப்பிணியான இவா், பிரசவத்திற்காக கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தநிலையில், கெளசல்யாவுக்கு அவரது தந்தை ஜெயராமன், மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகத்துக்கு எதிரே உள்ள தனியாா் உணவகத்தில் இட்லி வாங்கி வந்தாா். அதை கௌசல்யா சாப்பிட்டபோது, சாம்பாரில் சிறிய பல்லி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயராமன் உணவகத்தில் கேட்டபோது, அங்கிருந்த ஊழியா்கள் உரிய முறையில் பதிலளிக்காமல் அலட்சியமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் திருப்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையிலான அலுவலா்கள் உணவகத்தில் ஆய்வு செய்து, சாம்பாா் மற்றும் உணவு மாதிரியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தனா். மேலும், தனியாா் உணவகத்துக்கு சீல் வைத்தனா்.