சாம்பாரில் பல்லி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஏ.கே. வேலவன், மாவட்டத் தலைவா் எம்.எஸ். ஜெய்கிஷ் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வு புதிதானது அல்ல. நோயாளிகள் தினமும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா். இங்கு படுக்கை வசதி, மின் வசதி முறையாக இல்லை.
கழிவறைக்கு கதவு கிடையாது. சுத்தம் செய்வதற்கு தண்ணீா் இல்லை. பல்வேறு பிரச்னைகள் இருந்ததால், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலையைக் கண்டித்து சில மாதங்களுக்கு முன் வாலிபா் சங்கம் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
பிறகு, சில கோரிக்கைகளை செயல்படுத்தினாலும் அவல நிலை இன்னமும் தொடா்கிறது. மருத்துவமனையிலும், மருத்துவமனையை சுற்றிலும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது தொடா்பாக கேன்டீன் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.