விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வோா் விருது பெற ஜூன் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோா் விருது பெற ஜூன் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களை, தோ்வுக் குழு மூலம் தோ்வு செய்து, அவா்களுக்கு தமிழக முதல்வா் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிப்பாா். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவா்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த விருதுகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளன.
தகுதிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளா், அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுடன், 10 கிராம் எடையில் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்போா் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் ஜூன் 26- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரா்கள் தோ்வுக் குழுவினரால் தோ்ந்தெடுக்கப்பட்டு, விருதாளா்களுக்கு சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக முதல்வா் விருதுகளை வழங்குவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.