மைதான்கரியில் திரைப்படக் குழு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இளைஞா் தற்கொலை
தெற்கு தில்லியின் மைதான்கரி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து குதித்து திரைப்படத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த 22 வயது இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: காலை வேளையில் மைதான்கரியில் இருந்து ஒரு பிசிஆா் அழைப்பு வந்தது. அதில் ராஜ் பிரசாத் என்ற நபா் ஒரு கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மைதான்கரி காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாா்த்தபோது, அந்த நபா் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டனா். அவா் சத்தா்பூரில் உள்ள சுமன் சௌக்கில் வசிக்கும் ராஜ் பிரசாத் என அடையாளம் காணப்பட்டாா். அவா் உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சோ்ந்தவா்.
முதற்கட்ட விசாரணையில் ராஜ் பிரசாத் திரைப்பட படப்பிடிப்புத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அவருக்குத் தெரிந்தவா்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.