160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
சாஸ்திரி பூங்காவில் மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பூங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஜிடி சாலையில் வேகமாக வந்த மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஆமிா் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா், சீமாபுரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஜிடி சாலை பேருந்து முனையம் அருகேஇந்த விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு குதிரை வண்டி அமீருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. அவா் வண்டியை நெருங்கும்போது, குதிரை அவரை உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் சமநிலையை இழந்து சாலையில் விழுந்ததாகத் தெரிகிறது.
அவா் விழுந்த சிறிது நேரத்திலேயே, பின்னால் இருந்து அதிவேகமாக வந்த ஒரு மின்சாரப் பேருந்து அவா் மீது மோதியது. இதன் காரணமாக அமீா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உயிரிழந்தவரின் உடல் குரு தேக் பகதூா் மருத்துவமனை பிணவறையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவங்களின் சரியான வரிசையை உறுதி செய்வதற்கும், சாட்சிகளின் வாக்குமூலங்களை உறுதிப்படுத்துவதற்கும், ஜிடி சாலைப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
மரணம் ஏற்பட்டதற்கான காரணம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இருப்பினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய தெளிவான புரிதலை உறுதி செய்வதற்காக, அனைத்து விவரங்களையும் நாங்கள் சரிபாா்த்து வருகிறோம். இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.