Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?
குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டது.
ஆனால், விமானமானது டேக் ஆஃப் ஆன அடுத்த சில நிமிடங்களிலேயே, விமான நிலையத்துக்கு அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி வளாக அடுக்குமாடி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் விபத்து நடந்த பகுதியில் 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணிநேரங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்தார்.
இந்த நிலையில், டைம்ஸ் நவ் (Times Now) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பேசியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் சந்திரசேகரன், "இது மிகவும் வேதனையான நேரம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை.
எங்கள் விமானங்களில் ஒன்றில் இத்தகைய துயர சம்பவம் நடந்ததற்கு டாடா குழுமத்தின் தலைவராக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வரும் நாள்களில் சாத்தியமான எல்லா வழிகளிலும் ஆதரவளிப்பதும், அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதும்தான் நாம் அனைவரும் செய்யவேண்டும்." என்று கூறினார்.

தொடர்ந்து விபத்துக்கான காரணம் தொடர்பாக அடிபடும் பேச்சு குறித்து பேசிய சந்திரசேகரன், "சிலர் இதை மனிதத் தவறு என்று கூறுகிறார்கள். சிலர் இயந்திரக் கோளாறு என்கிறார்கள்.
இன்னும் சிலர் விமான பராமரிப்பு குறைபாடு என்கிறார்கள். ஆனால், எனக்கு கிடைத்த தகவலின்படி, விமானத்தின் செயல்பாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை.
விமானத்தின் வலதுபுற இன்ஜின் புதியது. கடந்த மார்ச்சில்தான் அது பொருத்தப்பட்டது.
இடதுபுற இன்ஜின் 2023-ல் சர்வீஸ் செய்யப்பட்டது. அதன் அடுத்த சர்வீஸ் இந்த ஆண்டு டிசம்பரில்தான். எனவே, இரண்டு இஞ்சின்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லை.
கேப்டன் சபர்வால் 11,500 மணிநேரங்களுக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர். கிளைவ் குந்தர் 3,400 மணிநேரங்களுக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர்.
என்னிடம் பேசியவர்கள் அனைவரும், இவ்விருவரும் திறமையானவர்கள், வல்லுநர்கள் என்று கூறினர்.
இப்போது, விபத்து தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் (cockpit) குரல் பதிவு ஆகியவை உண்மை என்னவென்று நமக்கு விளக்கும்.
அதுவரை எந்தவொரு அவசர முடிவுக்குச் செல்வதை நாம் தவிர்க்க வேண்டும்." என்று கூறினார்.

மேலும், முந்தைய காலங்களில் ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விதித்த அபராதங்கள் குறித்து பேசுகையில், "அவை விமான தாமதங்கள் மற்றும் பிற சேவைகள் தொடர்பானவையே தவிர, விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியது அல்ல.
பாதுகாப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) எங்கள் விமானங்களை பறக்க அனுமதிக்காது." என்று சந்திரசேகரன் விளக்கினார்.