MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.
கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் எரிந்த கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 18 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள நான்கு பேர் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
கப்பலில் இருந்து சுமார் 35 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு இடையே கப்பலில் தீ அணைக்கும் முயற்சியில் இந்தியக் கப்பற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை ஈடுபட்டு வருகின்றன.

கொழுந்துவிட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டாலும், கண்டெய்னருக்குள் எரியும் சிறிய அளவிலான தீ காரணமாக கரும்புகை வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த எம்.இ.ஆர்.சி வீரர்கள் கப்பலில் இறங்கி முன்பக்கம் கயிறு கட்டினார்கள். இதை அடுத்து கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 65 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆழ்கடலில் விடப்பட்டது.
8 நாட்களாக எரிந்துகொண்டிருக்கும் கப்பல் தற்போது சுமார் 2000 மீட்டர் ஆழமுள்ள கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கப்பலை அதிக தூரம் இழுத்துச் செல்லும் முயற்சி நடந்துவருகிறது.
கடலில் மழை பெய்துவரும் நிலையிலும் கப்பலில் தீ அணையாமல் புகைந்துகொண்டே இருக்கிறது. எரிபொருள் இருக்கும் டேங்கில் தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை கப்பல் எரிந்து மூழ்கினாலும், அல்லது இரண்டாகப் பிளந்தாலும் கரைப்பகுதியைப் பாதிக்காத வகையில் கப்பல் ஆழ்கடலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான் ஹாய் 503 கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் மற்றும் வேறு பொருட்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கோழிக்கோடு முதல் ஆலப்புழா வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ரசாயன பொருள்கள் அடங்கிய கண்டெய்னர்கள் இருந்ததால் கரை ஒதுங்கும் பொருட்களைத் தொடவோ, அருகில் செல்லவோ வேண்டாம் எனவும், 200 மீட்டர் தூரம் தள்ளி நிற்க வேண்டும் எனவும் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.