ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கரு...
``அண்ணாமலை அதிருப்தியாக இருக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்கள்” - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
“ ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக மதுரையில் முருகன் மாநாடு நடக்கிறது’ என்கிறீர்கள். ஆனால், ‘மதுரையில் நடப்பது முருகன் மாநாடு அல்ல... சங்கிகளின் மாநாடு. மக்களைப் பிளவுப்படுத்தும் ஆயுதமாக இதை சங்கிகள் நடத்துகின்றனர்’ என்கிறாரே அமைச்சர் சேகர் பாபு?”
“சேகர்பாபுவுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் எனத் தெரியவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில்கூட தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி எம்.பி பிரியாணி சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டதால்தான் பிரச்னை ஏற்பட்டது. ஆனால், அவர்கள் எங்களைப் பார்த்து மக்களைப் பிளவுபடுத்துவதாகச் சொல்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறோம். நாங்கள் எந்த பிளவுவாத அரசியலையும் செய்யவில்லை.”

“ ‘தமிழ் மொழியிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற கமல்ஹாசனை ‘தவறு செய்திருக்கிறார் கமல். அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?”
“படத்திற்குத் தமிழில் பெயர் வைக்க வக்கில்லை. நீங்கள் என்ன தமிழைப் பாதுகாக்கிறீர்கள்? தமிழில் பெயர் வைக்க முடியாத படத்துக்குப் பின்னால், தமிழகம் நிற்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தமிழக இளைஞர்கள் இத்தகைய போலி தமிழர்களிடம் இனியும் ஏமாற வேண்டாம்.”
“கமல்ஹாசன் கூறியது தவறு என்றால், ‘கன்னடம், தமிழ் மொழியிலிருந்து தோன்றவில்லை’ என்கிறீர்களா?”
“நான் அதற்குள் செல்லவில்லை. கமல்ஹாசனுக்கு 60 வயது ஆகிவிட்டது. இதில் எத்தனை முறை தமிழ் குறித்து அவர் பேசியிருக்கிறார்? படம் ஓட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்.”

“அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில், ‘மாவட்டச் செயலாளர் என்பதால் என்னிடம் 83 வட்ட செயலாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். தினமும் 10, 15 பேர் எனக்கு போன் பண்ணுவார்கள். இதில் தேவையில்லாமல் பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என்கிறாரே மா.சுப்பிரமணியம்?”
“ ‘ஞானசேகரன், தி.மு.க வட்டச் செயலாளர் சண்முகத்திடம் பேசியிருக்கிறார். பிறகு சண்முகம், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் பேசியிருக்கிறார்’ என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மா.சு கூறுவதுபோல 83 வட்ட செயலாளர்களும் ஞானசேகரனிடம் பேசிவிட்டு பிறகு மா.சுவிடம் பேசியிருந்தால் சந்தேகம் வராது. ஒரு வட்ட செயலாளர் மட்டும் பேசியதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே ‘83 பேரும் எத்தனை மணிக்குப் பேசினார்கள், அதில் சண்முகம் மட்டும் ஞானசேகரனிடம் பேசிவிட்டு தன்னிடம் எதற்காக 8 முறை பேசினார்’ என்பதையெல்லாம் கால் ரெக்கார்டிங் தகவலாக முன்னால் வைத்துக்கொண்டு மா.சு பதிலளிக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சு-வை காவல்துறை கட்டாயம் விசாரிக்க வேண்டும்.”

“ ‘ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்’ என்கிறாரே துணை முதலமைச்சர் உதயநிதி?”
“ED-க்கும் மோடிக்கும் பயம் இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலினுக்கு எதற்காகக் குளிர்காய்ச்சல் வருகிறது? அவருடன் இருந்தவர்களெல்லாம் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் பேசி பயப்படாதவர்கள் போலக் காட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.”

“இதேபோல், ‘2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்’ என்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின்?”
“இந்த விவகாரத்தில், ஸ்டாலினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை? பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். நீங்கள் ஏன் செய்யவில்லை? அனைத்து தவறுகளையும் உங்கள் மீது வைத்துக்கொண்டு மத்திய அரசு மீது பழி சுமத்துவதை இனியும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
2027-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் எந்த வகையிலும் தமிழகம் பாதிக்கப்படாது என்கிறது உள்துறை அமைச்சகம். மேலும் தமிழகத்திற்கு நேரடியாக வந்தபோதும் ‘பாதிப்பு இல்லை’ என அமித் ஷா சொல்லிவிட்டார். டாஸ்மாக், நீட் விவகாரத்தில், தி.மு.க பொய் சொன்னதுபோல நாங்கள் பொய் சொல்கிறோம் என நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் உண்மையைத்தான் பேசுவோம்.”

“2026-ல் தே.ஜ கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்கிறீர்கள். ஆனால், பா.ம.க-வுக்குள் நிலவும் உட்கட்சி பிரச்னை, அ.தி.மு.க - தே.மு.தி.க இடையிலான கோபம்... எனப் பல சிக்கல்கள் நிலவுகின்றனவே?”
“ஒற்றுமையாக இருப்பதுபோல காணப்படும் தி.மு.க கூட்டணியில்தான் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என போஸ்டர் ஒட்டியதற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கொடிக்கம்பங்கள்கூட நட முடியவில்லை என வி.சி.க வருத்தம் தெரிவிக்கிறது. பிரேமலதாவைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் நலன் மீது அக்கறை கொண்டவர். எனவே சரியான முடிவைத்தான் எடுப்பார். நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம்.”
“கட்சித் தலைவர் பதவி பறிபோனதால் அண்ணாமலை அதிருப்தியாக இருப்பதாகச் சொல்கிறார்களே?”
“அவர் அதிருப்தியாக இருக்க வேண்டும் என மற்றவர்கள்தான் நினைக்கிறார்கள். பவன் கல்யாண் பங்கேற்ற நிகழ்ச்சி, கட்சி சார்பில் நடத்தப்படவில்லை. தனியாக நாங்கள் நடத்தினோம். எனவேதான் அவரது படம் இல்லை. அவர் தொடர்ந்து கட்சிப் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்.”

“ட்ரம்ப்பிடம் மோடி சரணடைந்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?”
“ட்ரம்ப் தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த எலான் மஸ்க் உடனேயே சண்டை போட்டு வருகிறார். இப்படி அனைவருடனும் சண்டை போடுபவரைப் பார்த்து இந்தியாவுடன் ஏன் சண்டை போடுகிறீர்கள் என எப்படிக் கேட்க முடியும்?”