ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு குறித்து, அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு மசோதா முன்மொழியப்பட்டது.
மசோதாவில் தெரிவித்ததாவது, காவல்துறை உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத அல்லது சட்டத்தை மீறும் எவருக்கும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். விளையாட்டு, சர்க்கஸ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், காவல்துறை அனுமதியைப் பெறத் தவறினாலோ, கூட்டத்தினை நிர்வகிக்க முடியாவிட்டாலோ, ஏற்படும் எந்தவொரு தீங்குக்கும் ஈடு செய்யாவிட்டாலோ கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் வரையில் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் அலட்சியம் காரணமாக, மரணம் அல்லது யாருக்கேனும் காயம் ஏற்பாட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், ஜாமீனில் வெளிவர முடியாது; வழக்குகளை முதல்தர நீதிபதிகள் விசாரிப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பாரம்பரிய மற்றும் மதக் கூட்டங்களான கண்காட்சிகள், தேரோட்டம், பல்லக்கு ஊர்வலம், படகு திருவிழாக்கள் மற்றும் பிற மதக் கொண்டாட்டங்களுக்கு இந்த மசோதா விலக்கு அளிக்கிறது.
இதையும் படிக்க:ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!