என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!
தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது.
தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் 19) மதியம் 1.45 மணியளவில் 130 பயணிகளுடன், ஏர் இந்தியாவின் ஏ 320 விமானம் புறப்பட்டு சென்றது.
இதனைத் தொடர்ந்து, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த விமானம் தலைநகரின் மீது சில நிமிடங்கள் பறந்த பின்பு, தில்லி விமானநிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் மீண்டும் ஹோ சி மின் நகரத்துக்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஏர் இந்தியா அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் பலியானார்கள்.
இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பின்னர் தொடர்ந்து பல ஏர் இந்தியா விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா!