``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அ...
மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவா் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் ‘எல் அண்ட் டி’ நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே ராட்சத கான்கிரீட் காரிடா் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அவ்வழியாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (43) என்பவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது குடும்பத்துக்கு மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரூ.5 லட்சமும், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனம் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தன.
இது தொடா்பான விசாரணைக்கு மெட்ரோ ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் அடங்கிய குழுவினா், விசாரணை அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் மேலாண் இயக்குநரிடம் சமா்ப்பித்தனா்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், பணியின்போது அலட்சியமாக இருந்த 4 பொறியாளா்களை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், ஒப்பந்த நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதமும் விதித்தது.