ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!
ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடைக்கால விடுமுறைகள் முடிந்து ஒடிசாவிலுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 20 ஆம் தேதியன்று திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு காலரா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஜாஜ்பூர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் விடுமுறையானது ஜாஜ்பூரில் ஜூன் 24 ஆம் தேதி வரையும், பத்ராக்கில் ஜூன் 21 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஒடிசாவின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நித்யாந்தா கோந்த் கூறியதாவது:
“காலரா பாதித்த ஜாஜ்பூர், கட்டாக் மற்றும் பத்ராக் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து, அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், காலரா பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளிலுள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை மேம்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இத்துடன், காலரா பாதித்த 3 மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் நிபுணர்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, காலராவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜ்பூர் மாவட்டத்தில் தற்போது 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தொற்றுக்கு 13 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!