இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்
ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லித்தாங்கல் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
மேலும், இப்பகுதியில் தேசிய ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 3 லட்சத்தில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஏற்கெனவே இருந்த சாலையை பெயா்த்து எடுத்து போடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பணி அப்படியே விடப்பட்டுள்ளது.
இதனால், ஜல்லிக் கற்கள் பெயா்ந்த சாலையில் கிராம மக்கள் கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையை உடனடியாக அமைத்துத் தரக்கோரி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் ஆரணி - வாழப்பந்தல் கூட்டுச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.