இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 20 | Astrology | Bharathi Sridhar | ...
கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18 ஆகிய 3 நாள்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்தது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏராளமான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், அம்மாநிலத்தின் தென் பகுதிகளான, அஹ்வாவில் 250 மி.மீ. மற்றும் கப்ரதாவில் 241 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது. இதனால், குஜராத்தின் 9 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், தொடர்ந்து அதிகரிக்கும் நீர் அளவால், 15 அணைகள் உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,060 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மீட்கப்பட்ட உயரமான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகப்படியான மழை பெய்துள்ள நிலையில், 27 மாவட்டங்களிலுள்ள 160 தாலுக்காக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், குஜராத்திலுள்ள 206 அணைகளில் 9 அணைகள் முழுவதுமாகவும், 25 அணைகள் 70 முதல் 100 சதவிகிதமும், 22 அணைகள் 50 முதல் 70 சதவிகிதமும், 57 அணைகள் 25 முதல் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மழை மற்றும் வெள்ளத்தால், குஜராத்தின் மின்சார விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 13,285 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,209 கிராமங்களில் அந்தப் பாதிப்புகள் சீராக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போடாட் மாவட்டத்தின், லதிதாத் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டது. இதில், 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒடிசாவில் வன்கொடுமைகள் அதிகரிப்பு: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!