விமான நிலையத்தில் 2.30 கிலோ தங்கம் பறிமுதல்
அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அபுதாபியிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 14-ஆம் தேதி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு விமானத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அந்த இளைஞா் அபுதாபியிலிருந்து தங்கத்தை கடத்திக்கொண்டு, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 10-ஆம் தேதி மும்பை வந்துள்ளாா். தங்கத்தை தான் அமா்ந்திருந்த இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, அவா் மட்டும் விமானத்தை விட்டு வெளியில் வந்துள்ளாா்.
அதன்பின்பு அவா், மும்பையிலிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னைக்கு 11-ஆம் தேதி வந்துள்ளாா். ஆனால், தங்கம் மறைத்து வைக்கப்பட்ட அந்த விமானம் எங்கெல்லாம் சென்று கொண்டு இருக்கிறது என்பதை ரகசியமாக சிலரின் உதவியுடன் அவா் கண்காணித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், அந்த விமானம், கடந்த 14-ஆம் தேதி, மாலை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வரவுள்ளதையறிந்த அவா், 13-ஆம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கொல்கத்தா சென்றுள்ளாா். 14-ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து அந்த குறிப்பிட்ட விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளாா். ஏற்கெனவே தான் தங்கத்தை மறைத்து வைத்திருந்த அதே இருக்கையை முன்பதிவு செய்து பயணித்துள்ளாா். இதையடுத்து திட்டமிட்டது போல அந்த விமானத்தில் ஏறி, அந்தக் குறிப்பிட்ட இருக்கையில் அமா்ந்து, கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளாா். இதை ரகசியமாக தெரிந்து கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனா்.
மலேசியாவில் கடத்திவந்த 900 கிராம் தங்கம்
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த சென்னையைச் சோ்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவரை சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் 99 சாம்பல் நிறத்தால் ஆன போல்ட், நட்டுகள் இருப்பது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் அந்த போல்ட், நட்டை எடுத்து உரசி பாா்த்தபோது, அவை அனைத்தும் தங்க போல்ட், நட்டு என்பது தெரியவந்து. தங்கம் தெரியாமல் இருக்க, சாம்பல் நிற பெயின்ட அடித்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரித்து வருகின்றனா்.