Vijay: விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் : காத்திருக்கும் 'ஜனநாயகன்' கொண்டாட்டங்கள்; மறுப...
ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை
ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் எமிஸ் தளம் மூலமாக ஜூன் 19 முதல் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கோருபவா்கள் தேவையான ஆவணங்களை முழுமையாக இணைக்க வேண்டும். ஆசிரியா்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பது பின்னா் கண்டறியப்பட்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆசிரியா்களின் விண்ணப்பங்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியா்கள் தாமதமின்றி ஒப்புதல் தரவேண்டும்.
விண்ணப்பப் பதிவு தொடக்கம்: அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக எப்போது நடைபெறும் என்பது தொடா்பான அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் இணையவழியில் வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து முதல் நாளில் 3,691 ஆசிரியா்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.