'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும...
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி லீட்ஸ் திடலில் இன்று(ஜூன் 20) மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளனர். மேலும், ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்படவிருக்கிறது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி, விமான பணியாளர்கள், பயணிகள், பொதுமக்கள் என 274 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இவர்களில் இந்திய குடிமக்கள் 181 பேரும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேரும் அடங்கும். இது தரப்பிலும் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரு அணியினரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடவுள்ளனர். மேலும், போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டவுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் தரப்பில் இருக்கும் ஒரு விஷயம் இந்தியாவை மீண்டும் எவ்வாறு சந்தோஷப்படுத்தப் போகிறோம் என்பதில்தான் உள்ளது. சோகத்தில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களின் கூடுதல் பொறுப்பு” என்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும், இந்திய அணி மோதிய இண்ட்ரா ஸ்குவாட் போட்டியிலும் அகமதாபாத் விமான விபத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிக்க |ஸ்மித் காயம், லபுஷேன் நீக்கம்: இளம் வீரர்களுடன் களமிறங்கும் ஆஸி.!