இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் காட்டிலும் பெரிது: ஷுப்மன் கில்
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்வதைக் காட்டிலும் பெரிது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா? பென் ஸ்டோக்ஸ் பதில்!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கோப்பையை விட பெரிது...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் கோப்பையை வெல்வதைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணியின் கேப்டனாக இந்தியாவை வழிநடத்துவது மிகப் பெரிய விஷயம். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. ஒருவர் இரண்டு அல்லது மூன்று முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணியை கேப்டனாக வழிநடத்தினால், அது அந்த தலைமுறையில் சிறந்த விஷயமாக இருக்கும்.
ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். என்னைப் பொருத்தவரை, சேனா நாடுகளில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா) டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை என்றார்.
இதையும் படிக்க: புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த முக்கிய அறிவுரை!
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, ஷுப்மன் கில் தலைமையில் தொடரைக் கைப்பற்றுமா என்பதை பார்க்கலாம்.