இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா? பென் ஸ்டோக்ஸ் பதில்!
இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களின் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த முக்கிய அறிவுரை!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
பென் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?
இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாததால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைக்கவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணிக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணியை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று கிடையாது. இந்த மூத்த வீரர்களுக்குப் பதிலாக அணியில் இடம்பெறும் இளம் வீரர்களை குறைவாக மதிப்பிட முடியாது.
இதையும் படிக்க: கேப்டனாக கலக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை ஜஸ்பிரித் பும்ரா முன்னின்று வழிநடத்துகிறார். அவர் மிகவும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளார். அதற்கு அவரது சாதனைகளே சான்று. உலகின் எந்த ஆடுகளங்களில் பந்துவீசினாலும், அவர் மிகவும் அற்புதமாக செயல்பட்டு எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியவர். எங்களுக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பது தெரியும். அவர் மட்டுமின்றி, இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களும் எங்களுக்கு அச்சுறுதலாக இருப்பார்கள் என்றார்.