புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த முக்கிய அறிவுரை!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை (ஜூன் 20) லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.
இதையும் படிக்க: கேப்டனாக கலக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!
முடிவுகளுக்கு கவனம் கொடுங்கள்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், வெளியிலிருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஷுப்மன் கில் அவரது முடிவுகளுக்கு கவனம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: ஷுப்மன் கில்லுக்கு நேரம் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். ஷுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரப்போவதை என்னால் உணர முடிகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஷுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஷுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அணியின் நலனை கருத்தில் கொண்டு ஷுப்மன் கில் அவரது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை: ரவி சாஸ்திரி
இந்தியா - இங்கிலாந்து இடையே நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இரண்டு அணிகளுக்குமான 2025-27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.