'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்
இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு, மாநில அரசு...
இந்த அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசிக்கு மத்திய அரசு மாநில அரசுக்கு மானியம் வழங்குகிறது. சர்க்கரை, பாம் ஆயில் போன்றவைக்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது. இதனால், இந்த இரண்டு அட்டைதாரர்கள் அரிசி வாங்கும்போது ஒரு முறையும், சர்க்கரை, பாம் ஆயில்... வாங்கும்போது மற்றொரு முறையும் கைரேகை வைக்க வேண்டியதாக இருந்தது.

ஏன் இந்த இரு கைரேகைகள்?
ஏற்கனவே இந்த அட்டைதாரர்களின் கைரேகை அவர்களது ரேஷன் கார்டோடு இணைந்திருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் கைரேகை வைக்கும்போது, உரிய நபருக்குத் பொருட்கள் சென்று சேர்கிறது என்று பதிவாகிறது.
மேலும், இந்த கைரேகைப் பதிவு கணக்கை மத்திய அரசிடம் கொடுத்து தான் மானியத் தொகையை பெறுகிறது மாநில அரசு. இதனால், இந்த கைரேகை அவசியமாகிறது.
இனி...
இது எப்படி இருந்தாலும், இரு கைரேகைகள் பதியும்போது, இரு பில்கள் கொடுக்கப்படுகின்றன. இதற்கான பிராசஸிங் நேரம் ஒவ்வொருவருக்கும் அதிகம் ஆகி, ரேஷன் கடைக்கு சென்றாலே அதிக நேரம் எடுக்கிறது. இதனால், அதிக நேரம் காத்திருத்தல், வேலை பாதித்தல் என மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்க, இனி மேல், PHH மற்றும் PHH AAY அட்டைத்தாரர்கள் ஒரு முறை கைரேகை பதிந்தால் போதும் என்கிற நடவடிக்கையை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசு.