`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய ஜெகன்மூர்த்தி
கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.
அதைத் தொடர்ந்து இளைஞரின் தம்பியான 17 வயது சிறுவன் கடந்த 7ம் தேதி கடத்தப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை தேனியைச் சேர்ந்த வனராஜா, அவரின் உறவினர்கள், நண்பர்கள் மணிகண்டன், கணேசன், புரோக்கராக செயல்பட்ட மகேஷ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 06 G 0606 என்ற பதிவு எண் கொண்ட கார் ஏடிஜிபி ஜெயராமனின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் வாகனம் எனத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கே.வி.குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் முயன்றபோது புதிய பாரதம் கட்சியினர் அவர் வீட்டு முன் கூடி அமளியில் ஈடுபட்டனர். போலீசார் வீட்டுக்குள் சென்றபோது பூவை ஜெகன் மூர்த்தி வீட்டில் இல்லை.
ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. "84,000 பேர் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசத்தான் உங்களுக்கு வாக்களித்தனர்.

ஆனால், அதை மறந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தியுள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?" எனக் காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தார் நீதிபதி.
போலீசாரிடம் தனக்கும் கடத்தல் சம்பவத்துக்கு தொடர்பு இல்லை எனக் கூறியிருக்கிறார் ஜெகன்மூர்த்தி. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படலாம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக அரசின் காழ்ப்புணர்வு!
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மூர்த்தி, "நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும் மக்களிடத்திலும் அரசுக்கு எதிராக பேசிவருகிறேன். காழ்ப்புணர்வில் எனக்கு எதிராக செயல்பட சமயம் தேடிக்கொண்டிருந்த அரசு, சம்பந்தமே இல்லாமல் என்னை இதில் சிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. அதில் நீதிபதி சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
என்மீது தவறாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நீதிபதி மாற்றியுள்ளார். மற்ற விவகாரங்களை நான் நீதிமன்றத்தில் பேசியிருக்கிறேன். நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தமிழக அரசு என்னைக் குறிவைக்க நானென்ன தீவிரவாதியா, பயங்கரவாதியா... இதுபோல நெருக்கடி கொடுத்தால் நான் கூட்டணிக்கு வந்துவிடுவேன், எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலகிவிடுவேன் என நினைக்கின்றனர். எப்போதிருந்தாலும் நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கு நானும் புதிய பாரதம் கட்சியைச் சேர்ந்தவர்களும் அஞ்சப்போவதில்லை" எனப் பேசியிருந்தார்.