காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் ...
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: மழையால் பாதிக்கப்படுமா?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(ஜூன் 20) மதியம் 3.30 மணிக்கு ஹெட்டிங்லேயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டதால், இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. முதல் போட்டியிலேயே கில் வெற்றியைப் பதிவு செய்ய மழையும் ஒத்துழைப்பு கொடுக்குமா என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
லீட்ஸில் தொடங்கவுள்ள போட்டியில், மேகமூட்டமான சூழ்நிலையும், இடைவிடாத மழையும் வார இறுதி முழுவதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழையால் முதல்நாளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், 2 மற்றும் 3 ஆம் நாளின் பிற்பகல் மழை பெய்யக்கூடும் என்றும், 4 ஆம் நாள் மாலையில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 ஆம் நாள் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மேக மூட்டம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை ஆட்டத்தின் போக்கை கணிசமாக பாதிக்கும் என்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், பேட்டரிகளின் திறமையை இது சோதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரு அணிகளும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் கவுன்டி போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்கவர்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பர்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், 4 இன்னிங்ஸ்களில் 61.00 சராசரியுடன் 244 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சதமும் (119 ரன்கள்) அடங்கும்.
மிடில் ஆர்டரில் இடம்பெற வாய்ப்புள்ளவரான கருண் நாயர், நார்தாம்ப்டன்ஷையருக்கு சிறப்பாக விளையாடினார். 14 இன்னிங்ஸ்களில் 56.61 சராசரியுடன் 736 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இதில் இரட்டை சதம் ஒன்றையும் விளாசியிருந்தார்.
சாய் சுதர்சனும் சர்ரே அணிக்காக விளையாடி, இரண்டு சீசன்களில் 281 ரன்கள் எடுத்திருந்தார். பந்து வீச்சாளர்களில், கென்ட் அணிக்காக அர்ஷ்தீப் சிங் 13 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் லங்ஷயர் அணிக்காக 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதையும் படிக்க | இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி!