Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! எ...
அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார்: நயினார் நாகேந்திரன்
மதுரை: மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் வெள்ளிக்கிழமை வழிபட்ட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார் என தெரிவித்தார்.
இந்து முன்னணி அமைப்பு சாா்பில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு, மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு, அண்மையில் பக்தா்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. அறுபடை வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட வேல்கள், இந்தக் கோயில்களில் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, இந்து முன்னணி அமைப்பினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பிறகு, அங்குள்ள மாதிரி கோயில்களில் அவா் வழிபட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
பழனியில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தினார்கள்.அரசியல்வாதிக்கும் ஆன்மீகம் இருக்கும். என்னை சாமி கும்பிடக்கூடாது என யாராவது சொல்ல முடியுமா?.
மாநாட்டுத் திடலில் அரசியல் அதிகம் பேசக்கூடாது என்று நினைக்கிறோம். அதனால் பக்தி ஆன்மீகம் குறித்து மட்டும் பேசுவோம்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரம் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம், அவர்கள் ஏன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருகிறார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார்.
அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள்தான் அவர்களுக்கு ஊடகத்தின் வாயிலாக நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். ஆந்திரத்தில் இருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்யக்கூடாதா?
ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என பேசுவது தொடர்பான கேள்விக்கு, இப்போது ஒன்றும் தேர்தல் நடைபெறவில்லை. நாங்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் வாக்குகள் கேட்கவில்லையே.
திமுக ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டியுள்ளது. முதல்வருக்கு பக்தி இல்லை. அதனால் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் நடத்திய மாநாடு அரசியலுக்காக நடத்திய மாநாடு.
குடமுழுக்கு கோயில் திருப்பணிகளை மேற்கொள்வது அரசின் கடமை. அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டதே கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்குதான். மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்கள். அதனால் இதனை செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.
எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சானை செய்யப்படும் என உள்ளது. அறுபடை முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைப்போம்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றத்திற்கும் கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆய்வறிக்கை இன்னும் முடிக்க வேண்டியதுள்ளது. முடித்த பின்பு கண்டிப்பாக கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படும்.
மேலும், அமித்ஷா அடிக்கடி இனி தமிழகம் வருவார் என அவர் கூறினார்.